Header Ads



புத்தளத்திலிருந்து கால்நடைகளை கொண்டுச் செல்லத் தடை

(NF) புத்தளத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு மாடுகள் மற்றும் ஆடுகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் மத்தியில் கோமாரி நோய் பரவி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்திலும், வெளிப்பிரதேசங்களுக்கும் மாடுகள் மற்றும் ஆடுகளை கொண்டுசெல்ல முடியாது என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குமார டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோமாரி நோயினால் மாடுகள் மற்றும் ஆடுகளின் வாய், கால், மற்றும் மடியில் கொப்புளங்கள் ஏற்படுவதாக  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நோயிலிருந்து தமது கால்நடைகளை பாதுகாப்பதற்காக கடந்த வருடம் பண்ணையாளர்கள் தடுப்பூசி ஏற்றாமை நோய் பரவுவதற்கான காரணம் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

புத்தளம் மாவட்டத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் மத்தியில் பரவிவரும் கோமாரி நோயினால் கால்நடை பண்ணையாளர்களும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்குள் இலங்கையிலிருந்து கோமாரி நோயை முற்றாக அழிப்பதே தமது இலக்கு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் உரிய நேரத்தில் தமது கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமாறு திணைக்களம் பண்ணையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.