Header Ads



இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ரத்தத்தில் இந்திய மரபணு - ஆய்வில் பரபரப்பு தகவல்


இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ரத்தத்தில், இந்தியர்களின் ஜீன் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்தவர்களின் ஜீன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் குடும்ப உறவுகள் குறித்த, ‘பைன்ட் மை பாஸ்ட் என்ற ஆன்லைன் இணையதளத்தில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஷேக்ஸ்பியரும் கேமரூன் குடும்பமும் உறவு முறை என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆன்லைனில் நேற்று வெளியான தகவல்கள் வருமாறு:  

கேமரூனின் குடும்ப உறவுகள் மற்றும் மூதாதையர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரபல நகைச்சுவை நடிகர் அல் முர்ரே கேமரூனின் அத்தை அல்லது மாமன் மகனாக இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. இங்கிலாந்தில் வசித்த பிரபல எழுத்தாளர் வில்லியம் தாக்கரே. வேனிடி பேர் என்ற பிரபல புத்தகத்தை எழுதியவர். வில்லியம் தாக்கரே 1811 ஜூலை 18ல் கொல்கத்தாவில் பிறந்தவர். 1815ம் ஆண்டு வில்லியமின் தந்தை இறந்தார். அதன்பின் வில்லியம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். 

அது முதல் அவர் இங்கிலாந்தில் வாழ்ந்தார். கேமரூனின் மூதாதையர்களின் குடும்பத்துக்கும் இந்தியாவின் வில்லியம் மற்றும் முர்ரே குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு இருந்துள்ளது. கிழக்கிந்திய வர்த்தகத்தில் இரு குடும்பங்களும் இந்தியாவில் கோலோச்சிய போது இந்த உறவில் மேலும் நெருக்கம் அதிகரித்ததால் இரு குடும்பத்துக்கு இடையில் திருமண பந்தம் மற்றும் உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கேமரூனின் மூதாதையர்களில் இந்தியர்கள் இருந்துள்ளதை ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது.இவ்வாறு ஆன்லைனில் கூறப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ரத்தத்தில், இந்திய மரபணு உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.