அமெரிக்காவின் அராஜகங்களை அம்பலப்படுத்தியவர் நோபல் பரிசுக்காக பரிந்துரை
அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளிப்படுத்திய, ஸ்னோடென்னின் பெயர், நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென். அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை, கடந்த ஆண்டு, அம்பலப்படுத்தினார். இதையடுத்து, ஸ்னோடென் மீது, உளவு பார்த்தல், அரசு ஆவணங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, அமெரிக்கா, சுமத்தி உள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவிலிருந்து தலைமறைவான ஸ்னோடென், தற்போது, ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். நார்வே நாட்டின், முன்னாள் அமைச்சரும், இடதுசாரி கட்சி எம்.பி.,யுமான, சோல்ஜெல், நோபல் பரிசு கமிட்டிக்கு, ஸ்னோடென் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்து, நோபல் கமிட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சோல்ஜெல் கூறியதாவது:
அமெரிக்கா, நேச நாடுகள் உட்பட, எல்லா நாடுகளையும், கண்காணிக்கும் விஷயத்தை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். பல நாட்டு மக்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தையும் இவர் தான், வெளிப்படுத்தினார். அமைதிக்கு அடிப்படையானவற்றை இவர் ஒரு வகையில் செய்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தின் மூலம், உளவுவேலைகள் எப்படி நடக்கிறது என்பதை, இவர் பொது மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். எனவே, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும். இவ்வாறு, சோல்ஜெல் கூறியுள்ளார்.

Post a Comment