சாப்பிடும் உணவை வைத்து விளையாடும் குழந்தைகள் விரைவில் கற்றுக்கொள்கிறார்கள்
குழந்தைகள் சாப்பிடும்போது உணவை சிந்தினாலோ அல்லது அவற்றை வைத்துக் கொண்டு விளையாடினாலோ பெற்றோர்கள் அவர்களைக் கடிந்து கொள்வதுண்டு. ஆனால், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் இவ்வாறு சாப்பிடும்போது உணவுப்பொருட்களை வைத்துக் கொண்டு விளையாடும் குழந்தைகள் அவற்றை நினைவில் கொள்வதன் மூலம் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் உளவியல் இணை பேராசிரியையான லரிசா சாமுவேல்சனும் அவரது குழுவும் 16 மாதக் குழந்தைகளிடம் திட நிலையில் காணப்படாத 14 பொருட்களை காண்பித்து ஆய்வு செய்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை ஆப்பிள் சாஸ், புட்டிங், ஜூஸ் மற்றும் சூப் வகைகளைச் சேர்ந்தவையாகும்.
குழந்தைகள் இவற்றை உண்ணும்போது விளையாடியதை நினைவில் கொண்டு அவற்றை எளிதாகக் கற்றுக்கொண்டன. இதற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 16 மாதக் குழந்தையானது திடப்பொருட்களைக் கையாளும்போது அவற்றை எளிதில் கிரகித்துக் கொள்கின்றன என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாமுவேல்சன் நடத்திய ஆய்வின்மூலம் பொருட்கள் குறிப்பிட்ட உருவத்தைக் கொண்டிராதபோதும் அவற்றைத் தாங்கள் கையாளும்போது குழந்தைகள் எளிதாக நினைவில் வைத்துக் கொள்கின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயரம் கொண்ட நாற்காலிகளில் அவர்களை அமரவைத்து இந்தப் பொருட்களைக் காண்பிக்கும்போது அது அவர்களுக்குப் பழக்கமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றது. இதன் காரணமாகவும் அவர்கள் அவற்றை எளிதில் நினைவில் வைத்துக் கொள்கின்றார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment