கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினை உருவாக்குவதற்கான நியதிச்சட்டம்
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று 02.12.2013ம் திகதி கௌரவ தவிசாளர் று.பு.ஆ.ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது இன்று கிழக்கு மாகாணத்தின் வரவுசெலவுத்திட்டம் மற்றும் விசேட பிரேரணை என்பன சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் பல திணைக்களங்கள் உள்ளன இது வரையில் வீடமைப்பு அபிவிருத்திக்கு என்று எதுவித திணைக்களமும் இல்லை. எனவே எமது அமைச்சின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, அமைச்சின் கீழ் நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் போன்ற துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கட்டிடங்கள் நிர்மாணம் போன்ற துறைகளுக்கு எமது அமைச்சின் கீழ் தனித்தனியாக திணைக்களங்கள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக சம்பந்தப்பட்ட வேலைகள் செயற்படுத்தப்பட்டு வருவதனால், சகல வளங்களையும் எமது அமைச்சின் ஊடாகப் பெற்று திணைக்களங்களின் ஊடாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீடமைப்பு துறையானது எமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான துறையாகும். யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீடுகள் நமது மாகாணத்தில் நிர்மானிக்ப்பட வேண்டியுள்ளது. மக்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், உள்நாட்டு வெளிநாட்டு வளங்களைப் பெற்று வீடமைப்பு வசதிகளையும் தகுந்த முறையில் கிழக்;கு மாகாண மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்கும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையை உருவாக்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண வீடமைப்பு துறைக்கென, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை ஒன்று எமது அமைச்சின் கீழ் உருவாக்கப்படாத காரணத்தினால் இத்துறை மூலமான நடவடிக்கைகளை உரிய முறையில் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் வளங்களை எமது அமைச்சின் ஊடாக உரிய முறையில் பயன்படுத்துவதிலும் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தின் வீடமைப்புத் துறைக்கான சகல செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கும், மாகாணத்தின் ஏனைய அமைச்சுக்களின் ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ள வீடமைப்பு தொடர்பான திட்டங்கள் அல்லது இது தொடர்பான வளங்கள் வெளிநாட்டு நிதி ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் உள்ளடங்களாகப் பெற்று எமது அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஒன்றினை தனியாக எமது அமைச்சின் கீழ் உருவாக்குவது அவசியமாதலால் நியதிச்சட்டம் ஒன்றினை தயார் செய்து கிழக்கு மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்து அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகாண கௌரவ ஆளுனர் அவர்களின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை விதிக் கோவை 11ம் பிரிவு 01(அ) பிரிவின் கீழ்வரும் வீடமைப்பு தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் நியதிச்சட்டத்தினை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கின்றேன். நியதிச்சட்டக் குழுவின் அறிக்கையினையும் இத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.
Post a Comment