Header Ads



சாய்ந்தமருதுவில் மீன்பிடி உபகரணங்கள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு நாசம் (படங்கள்)


(ஏ.எல்.ஜுனைதீன்)

சாய்ந்தமருது கடற்கரையில் வாகனம் மற்றும் மீன்பிடிக்குத் தேவயான உபகரணங்கள் எரிபொருட்கள் என்பன வைக்கப்பட்டிருந்த மீன்வாடி ஆகியவை இனந்தெரியாத நபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. எரிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருதைச் சேர்ந்த பைக்கீர்முகைதீன் அலியார் (றாசீக்) வயது 46 என்பவருக்கு சொந்தமான வாடியே இவ்வாறு எரித்து அழிக்கப்பட்டுள்ளது

எரிக்கப்பட்ட வாகனம் மற்றும் மீன் வாடிக்குச் சொந்தக்காரரான  றாசீக் என அழைக்கப்படும் பி.எம்.அலியார் சுகயீனம் காரணமாக ஏற்கனவே வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே அவரின் பெறுமதியான சொத்துக்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

இச்சம்பவம் சம்மந்தமாக றாசீக்கின் மனைவியான  யாழ்ப்பாணம் சோனகத்தெருவைச் சேர்ந்த  செயின் ஜரிகா தகவல் தருகையில் அவர் கூறியதாவது:-

எனது கணவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இன்று சுபஹு நேரத்தில் ஒரு பையன் ஓடி வந்து உங்கள் வாகனம் மீன் வாடி எல்லாம் எரிகின்றது என்று கூறியதன் பின்னரே எனக்கு தெரிய வந்தது. சம்மவம் இடம்பெற்ற இடத்திற்கு நான் ஓடிப்போய் பார்த்த போது எல்லாம் எரிந்து சாம்பராகக் கிடந்தது.

எரிக்கப்பட்ட மீன் வாடியில் மீன் பிடி படகுகளுக்கு வழங்குவதற்கான டீசல் மண்ணெண்ணெய் ஆயில் என்பன கூடுதலாக வைத்திருந்த்துடன் மோட்டர் இயந்திரங்களும் இன்னும் பெறுமதியான பொருட்களும் இருந்தது இச்சம்பவத்தால் சுமார் 50 இலட்சம் ரூபா அளவில் எங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு எதிரிகள் எவரும் இல்லை. எவர்மீதும் சந்தேகமில்லை. என்றார்.

ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு தேவையான பெறுமதியான 7 மோட்டர் இயந்திரங்கள் டீசல் மண்ணெண்ணெய் என்பன போன்ற பொருட்கள் தீயிடப்பட்ட வாடியில் இருந்ததாக அங்கு கூடியிருந்தவர்களும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.



No comments

Powered by Blogger.