வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...!
உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் தைரியமாக இருப்பவர்கள் தான் மாற்றுத் திறனாளிகள். அனைத்து துறைகளிலும் இவர்கள், திறமையை வெளிக்காட்டுகின்றனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறைபாடு என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க, இந்த சமூகம் மறுக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும், டிச.,3ம் தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
15 சதவீதம்:
உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர், மாற்றுத் திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவிக்கிறது.
சலுகை அவசியம்:
மேலை நாடுகளில் ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களைக் கூட ஊனமுற்றவர்களாக கருதுகின்றனர். சில நாடுகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களாக கருதி, சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. இந்தியாவில் அப்படி இல்லை. வெளியே தெரியும்படியான ஊனத்தை மட்டுமே அரசு ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகை கிடைப்பதில்லை. ஊனமுற்றவர்களை வேலைக்கு எடுக்கவே நிறுவனங்கள் தயங்குகின்றன.
பொருளாதாரம் மேம்பட:
மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல், நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில், அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறிக்கக் கூடாது.
Post a Comment