Header Ads



சட்டவிரோத இஸ்ரேல் காசா மீது, ஆக்கிரமிப்பு தாக்குதல் - 3 வயது பலஸ்தீன குழந்தை வபாத்

இஸ்ரேல் பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதில் தாக்குதலாக பலஸ்தீனின் காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தீவிர வான் தாக்குதலில் மூன்று வயது பெண் குழந்தை உட்பட குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அல் மகாசி அகதி முகாம் மீது நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட இந்த வான் தாக்குதலில் ஹலா அபு ஸ்பைக் என்பவர் கொல்லப்பட்டிருப்பதோடு அவரது தாய் மற்றும் சகோதரர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சர் அஷ்ரப் அல் கித்ராவை மேற்கோள் காட்டி பலஸ்தீன செய்திச் சேவையான ‘மான்’ குறிப்பிட்டுள்ளது.

தவிர, தெற்கு மற்றும் வடக்கு காசாவில் இருக்கும் ஹமாஸ் தளங்கள் மீதும் வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் - காசாவுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் புதிய மோதல் இரு தரப்புக்கும் இடையில் ஓர் ஆண்டாக நீடிக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் காசா எல்லை வேலியை நேற்று முன்தினம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் பிரஜை ஒருவர் ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அருகிலிருக்கும் ஸ்தரோத் நகருக்கு விஜயம் செய்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றது. இந்த பகுதி பலஸ்தீனர்களின் தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகி வருகிறது.

‘இது பொறுத்துக்கொள்ள முடியாத சம்பவமாகும். இதற்கு பதில் கொடுக்காமல் விட்டுவிட முடியாது’ என்று எச்சரித்த நெதன்யாகு ‘முன்கூட்டிய செயற்பாடு மற்றும் படை மூலம் பதிலளிப்பது என்பதே எமது கொள்கையாக இருந்து வருகிறது. இந்த சம்பவத்திலும் நாம் இவ்வாறு தான் செயற்படப் போகிறோம்’ என்றார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தியதோடு காசா மீது பீரங்கி தாக்குதலும் நடத்தியது. இதில் மூன்று வயது பெண் குழந்தை கொல்லப்பட்டதோடு மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் ஹாலா அபு சபைகா என்ற குழந்தையே கொல்லப்பட்டிருப்பதோடு அதன் மூன்று குடும்ப உறுப்பினர்களும் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மறுபுறத்தில் வடக்கு காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேலின் பீரங்கி தாக்குதலில் மற்றொரு பலஸ்தீனர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேல் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பதில் தாக்குதலாக காசாவில் இருக்கும் தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் எதிராளியாக செயற்பட்டபோதும் 2012 ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற எட்டு தின கடும் மோதலுக்கு பின்னர் இரு தரப்புக்கும் இடையில் எகிப்து மத்தியஸ்தத்தில் யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டது.

காசாவிலிருந்து இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு சலபி போக்குவாதிகள் பொறுப்பேற்ற போதும் அந்த பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு மீதே இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

No comments

Powered by Blogger.