25 வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை, உயிர் பிழைத்தது
சீனாவில், 25வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை, அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது.
சீனாவின், சோங்கிங் நகரை சேர்ந்தவர், லீ ஷெங்சோங். இவரது, ஒரு வயது மகன் யுவான். பெற்றோர் வேலைக்கு சென்ற பின், இந்த குழந்தையை, அவனது பாட்டி கவனித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில், லீ என்ற சிறுமி குடியிருக்கிறாள். அவளது பெற்றோர் பணிக்குசென்ற பின், இந்த குழந்தையுடன், சிறுமி விளையாடி கொண்டிருப்பாள். கடந்த மாத இறுதியில், சிறுமியினுடைய சக்கர நாற்காலியில், யுவானை உட்கார வைத்து, அவனது பாட்டி விளையாட்டு காட்டி கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில், சிறுமியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு, வீட்டுக்குள் சென்றார் பாட்டி. அதற்குள்ளாக, குழந்தையின் மீது கொண்ட கோபத்தால், அவனை அடித்து உதைத்தாள் அந்த சிறுமி. அதன் பின், 25வது மாடியில் உள்ள, தன் வீட்டு பால்கனியிலிருந்து, குழந்தையை தள்ளி விட்டாள். பாட்டி வந்து கேட்ட போது, குழந்தையை ஒருவர் தூக்கி சென்றதாக கூறி விட்டாள். இதற்கிடையே, தரை தளத்திலிருந்த புதருக்கிடையே குழந்தை யுவான் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டான். முதலில் அவன் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
தீவிர சிகிச்சையில் தற்போது, அவனுக்கு நினைவு வந்துள்ளது. குழந்தையை, சிறுமி தாக்கியது, தள்ளி விட்டது போன்ற காட்சிகள், அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக, குழந்தையின் பெற்றோர், போலீசில் புகார் செய்துள்ளனர். சிறுமிக்கு, 10 வயது ஆவதால், அவளை கைது செய்ய முடியாது. இதற்கிடையே, சிறுமியின் பெற்றோர்,குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்றுள்ளனர்.

Post a Comment