Header Ads



விடுதலைப் புலிகளுக்கு 10 ரஷ்யர்கள் கொமாண்டோ பயிற்சி அளித்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

தமக்கும் வேறு சிலருக்கும் பத்து ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்ததாக, அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் தொடர்புடையவரென குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் விடுதலைப் புலி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடத்தப்பட்ட கரும்புலிகளினதும், வான்புலிகளினதும் தாக்குதல்களில், விமானப்படையின் 10 விமானங்கள் அழிக்கப்பட்டன. 

இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினரான, குகன் என்று அழைக்கப்படும் ராசவல்லவன் தபோரூபன் நேற்று அனுராதபுர சிறிப்பு நீதிமன்றில் சாட்சியமளித்தார். 

“எனக்கும் வேறு சிலருக்கும் ரஷ்யர்கள் பத்துப் பேர், சிறப்பு கொமாண்டோ பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.  யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் 2005ம் ஆண்டில் திட்டமிட்டனர். 

நான் தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மீது சுமார் 100 ஆட்டிலறி குண்டுகளை விடுதலைப் புலிகள் ஏவியிருந்தனர். 

அனுராதபுர விமானப்படைத் தளம் குறித்த தகவல்களை சேகரிக்கச் சென்ற எமக்கு, இரவுப்பார்வை தொலைநோக்கி, சத்தமின்றி சுடக்கூடிய கைத்துப்பாக்கி, புவிநிலைகாட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 

அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் திட்டம் 2007இல் விசுவமடுவில் உள்ள விடுதலைப் புலிகளின் தளத்தில் தயாரிக்கப்பட்டது. 

அதன் பின்னர் நான் மன்னாரில் உள்ள கடற்புலிகளின் முகாமுக்குச் சென்றேன். 

தாக்குதலுக்காக அனுராதபுர விமானப்படைத் தளத்துக்கு பச்சை நிறத்திலான இராணுவ சீருடையுடன் விடுதலைப் புலிகள் வந்திருந்தனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட அனுராதபுர சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வரும் 11ம் நாள் மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.