Header Ads



கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் பாராட்டும், அவரது வாழ்வியல் நூல் வெளியீடும்

இலங்கையின் மூத்த கல்விமான்களில் ஒருவரும் எழுத்தாளர் பன்னூலாசிரியர்  நிர்வாகி ஆய்வாளர் ,முஸ்லிம் கலாச்சார அமைச்சின் முன்னாள் இராஜாங்க செயலாளர்,கலாநிதி அஸீஸ் மன்றத்தின் தலைவர் இலங்கை முஸ்லிம் கல்வி சகாய நிதியத்தின் தலைவர்,மற்றும் மேடைப் பேச்சாளருமான அல்ஹாஜ்.எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கான பாராட்டு விழாவும் ஒரு கிராமத்துச் சிறுவனின் பயணம் எனும் அவரது வாழ்வியல் நூல் வெளியீட்டு நிகழ்வும் இம்மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணிக்கு தெஹிவளையில் அமைந்துள்ள சஹரான் ஹோட்டல் மண்டபத்தில் மணிப்புலவர் மருதூர் மஜித் தலைமையில் நடைபெறும். 

அல்ஹாஜ் எ.ரி.அப்துல் காதரின் கிறாஅத்துடன் ஆரம்பிக்கும் இந்நிகழ்வில் வரவேற்புரையும் அறிமுகவுரையும் பாராட்டுக் குழுவின் செயலாளர் வைத்திய கலாநிதி தாஸிம் அகமதும் வாழ்வியல் நூல் பற்றிய அறிமுக உரையை முன்னாள் கல்வியதிகாரி ஏ.பீர்முகம்மதும் வழங்குவர்.தேசபந்து ஜெஸீமா இஸ்மாயீல், பேராசிரியர் எஸ்.மௌனகுரு ,கொழும்பு ஸாஹிறாக்கல்லூரியின் பழைய மாணவரான டபிள்யு.ரத்னதேரர்,முஸ்லிம் மீடியா போரம் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ்.என்.எம்.அமீன் , சட்டத்தரணியும் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ரி.கே. அசூர் ஆகியோர் பாராட்டுரைகள் வழங்குவர்.

எஸ்.எச்.எம்.ஜெமீலை பாராட்டும் நிகழ்வும் நடைபெறும். ஜெமீலின் பாரியார் ஹாஜியானி சித்தி ஆரிபாவை பாராட்டுவதற்கு பல பெண்கள் அமைப்புக்கள் முன்வந்துள்ளன. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அன்றைய தினம் ஜெமீலை பாராட்டுவதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளன. தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் நிறைந்த அபிமானத்துடன் கூடிய வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிகழ்வின்போது 6 பாகங்களை உள்ளடக்கிய 450 பக்கங்களைக் கொண்ட வாழ்வியல் நூல் வெளியீட்டில் இரு பிரதிகள் விஷேட அதிதிகள் இருவருக்கு வழங்கி வைக்கப்படும். நூலின் ஏனைய பிரதிகளை அன்றைய தினம் மண்டபத்தில் வைத்து சகாய விலையில் பெற்றுக்கொள்ளலாம். 

எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல்பிரமுகர்கள் சமூகசேவையாளர்கள் நிர்வாக சேவையில் உள்ளவர்கள் நண்பர்கள் உறவினர்கள் என பல்துறைசார்ந்தவர்கள் கலந்துகொள்வதற்கான அழைப்புகள் ஏற்பாட்டு குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவ சங்க கொழும்புக்கிளை தயாரித்தளிக்கும் எஸ்.எச்.எம்.ஜெமீல் வாழ்வியல் பற்றிய (ஒலி,ஒளி) காணொளி நிகழ்ச்சியும் காண்பிக்கப்படும். ஏற்புரையை எஸ்.எச்.எம்.ஜெமீலும் நன்றியுரையை பாராட்டுக்குழுவின் உபபொருளாளர் நூலகர் ஸியாத் அகமதும் வழங்குவர். பாராட்டுக்குழு உறுப்பினர்களான சுங்க அத்தியட்சகர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். நசீர் ஊடகவியலாளர் எம்.சி.நஜிமுத்தீன் ஆகியோர் முக்கிய பணிகளினை பொறுப்பேற்று விழாவின் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.