Header Ads



பிரதேச அபிவிருத்தியில் பிரதேசவாதமும், முஸ்லீம் தலைமைகளின் போக்குகளும்

(தந்திமகன்)

ஆளும் அரசின் உதவியுடன் முஸ்லீம் அரசியல் தலைமைகள் தமது மக்கள்முன் அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தாலும் சில கட்சிகள் தங்களுடைய ஆளுமையை மேதகு ஜனாதிபதி முன் காண்பித்து பிரதேச அரசியலில் தங்களை வரித்துக் கட்டிக் கொண்டு அரசியல் செய்வதைக் காணலாம். இன்று கிழக்கு மாகாணம் என்றாலும்சரி, ஏனைய மாகாணம் என்றாலும்சரி கட்சியரசியல் ஊடாக தங்களை அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் அபிலாஷைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றிக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கிழக்கின் முக்கிய முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சியின் மூலம் கிடைத்த அரசியல் அதிகாரத்தை மக்களின் அபிவிருத்திக்காய் விதைத்து வருகின்றனர். மக்களும் அதன் மூலம் பல நன்மைகளை பெறுகின்றனர். இருந்தாலும் சில முஸ்லீம் கட்சிகள் பெயரளவில் அறிக்கை விடுவதும், செய்கின்றவர்களை செய்யவிடாது தடுப்பதும் அவர்களது வாடிக்கையான விடயங்களில் ஒன்று என்றே பொதுமக்கள் கூறுகின்றனர்.

தொடரும் அமைச்சர் அதாஉல்லாவின் அபிவிருத்திப் பணிகள்

இந்தவாரத்தில்கூட கிழக்கின் பலமிக்க அரசியல்வாதியாகவும், தனக்கான பணிகளை திறம்பட நடாத்திக் கொண்டிருப்பவராகக் கணிப்பிடப்படுகின்ற அமைச்சர் அதாஉல்;லா அவர்கள் அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீரகெட்டிய பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதியை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வைபவ ரீதியாக திறந்துவைத்தார். ஒருசில வாரங்களுக்கு முன்னர் பிரமாண்டமான முறையில் அமையப்பெற்ற அக்கரைப்பற்று மாநகர சபைக்கான கட்டிடத்தை அக்கரைப்பற்றில் திறந்துவைத்து வரலாறு படைத்திருந்தார். வீரகெட்டியாவில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா உரையாற்றுகையில்,

'எமது நாட்டிற்கு சுதந்திரத்தை டி.எஸ். சேனநாயக்கா பெற்றுத்தந்திருந்தாலும், எமது ஜனாதிபதி அவர்கள் பெற்றுத்தந்த சுதந்திரம் போல் அது அமையவில்லை. காரணம் டி.எஸ். சேனாநாயக்க எமது ஜனாதிபதி அவர்கள் நமது நாட்டை மீட்க பட்ட கஸ்டமும் சிரமமும் போன்று அவர்கள் அன்று பட்டதுமில்லை. நமது நாட்டை  மீட்கின்றபோது எமது ஜனாதிபதி அவர்கள் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பலவற்றின் எதிர்ப்பினையும்  முகம் கொண்டார். அதனையும் பொருட்படுத்தாது துணிச்சலுடன் செயற்பட்டு நமது தாய்நாட்டை மீட்டு நமது மக்களுக்கு நிலையான சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தார். நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை பிச்சைக்காரன் புண் போன்று வைத்து அரசியல் செய்யவில்லை. தாய் நாட்டின் மீது தூய்மை நிறைந்த அன்பு கொண்டவராக நாட்டுப்பற்றுள்ளவராக செயற்பட்டு நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி என்று ஒன்றை இப்போதுதான் நமது மக்கள் காண்கின்றனர். இன்று நகரம், கிராமம் என்று சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகிறது. ஒரு நாட்டின் முதுகெலும்பான பாதை அபிவிருத்தி உச்ச நிலைமையை அடைந்துள்ளது. நாட்டில் காபட் இடப்படாத பாதைகளே இல்லை என்றளவிற்கு நெடுஞ்சாலை அபிவிருத்தி ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு பாதைகள் அபிவிருத்தி அடைந்ததனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. மீன்பிடி, விவசாயம் மேலும் நமது நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது. நமது ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மக்களுக்கு நெருங்கிய சேவைகளை வழங்கும் உள்ளுராட்சி சபைகள் பல இனங்காணப்பட்டு எனதமைச்சின் கீழ் செயற்படும் புறநெகும திட்டத்தின் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. எனவே நமது தாய் நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது போன்று பல அபிவிருத்தி புரட்சிகளுக்கு வித்திட்டு, தலைமை தாங்கும் நமது ஜனாதிபதி அவர்களின் கரங்களை பலப்படுத்த ஜாதி இன மத கட்சி பேதமின்றி முன்வருமாறு' அமைச்சர் தனதுரையில் வேண்டிக் கொண்டார்.

இவ்வாறு அமைச்சர் தமது ஆளுமைகளுடாக மக்களுக்கான சேவைகளை ஆற்றிக் கொண்டுவரும் இவ்வேளையில் கிழக்கிலுள்ள முக்கிய ஆளும் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் பொதுவைபம் ஒன்றில் உரையாற்றும்போது பிரதேசவாதத்தை முழுமையாக விதைத்திருந்தாகக் கூறப்படுகின்றது. அதாவது, அவரது சொந்த ஊரில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு மாகாண சபை உறுப்பினர் இருந்தும் எங்களது அதிகாரத்தை தூசாக மதித்து அங்குள்ள பிரதேசசபையினர் இயங்குவதாகவும், தன்னால் ஒதுக்கப்பட்ட பணமும் உரியமுறையில் மக்கள் பாவனைக்கு பயன்படுத்தப்படாது திருப்பட்டுள்ளதாகவும், உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட பணத்தையும் அவர்கள் தருவதாக இல்லை என்றும், இந்நிலையில் எமதூரை நாம்தான் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும். அதற்காக எமதூருக்கு உண்டான பாராளுமன்ற உறுப்பினரை யாராவது எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் கொண்டு செல்ல வேண்டாம். அப்படி நடந்தேறினால் எதிர்காலத்தில் நாம் அக்கரைபற்றிக்கோ, சம்மாந்துறைக்கோ அல்லது கல்முனைக்கோ சென்று கையேந்துகின்ற நிலைமை உருவாகலாம்' என்பதாகத் தெரிவித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அந்த பாராளுமன்ற உறுப்பினர்.

அதேவேளை தமக்குக் கிடைக்கப்பெற்ற அமைச்சின் ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை நாடுமுழுவதும் மேற்கொண்டு வந்தாலும் கிழக்குப் பிரதேசத்திலும் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், கிழக்கு மாகாண அமைச்சருமான உதுமாலெவ்வையின் பெருமுயற்சியின் பயனாக வேலைத் திட்டங்கள் பற்பல மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. இதற்கு ஆதாரமாக அக்கரைப்பற்றிலுள்ள அனைத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு கார்பட் போடப்பட்டு வருகின்றன. இதுபோல் அட்டாளைச்சேனையில் கோணாவத்தை ஆற்றை புனர்நிர்மானம் செய்து நீண்டகாலமாக விவசாயம் மேற்கொள்ளப்படாது நீரில் அமிழ்ந்திருந்த சம்புக்களப்பு வடிச்சலை பலகோடி நிதிகொண்டு தோண்டி நீரை கடலுடன் கலக்கச் செய்யும் கைங்கரியத்தை மேற்கொண்டு வருவதாக அண்மையில் அமைச்சர் உதுமாலெவ்வை செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இவ்வாறு தங்களுடைய பிரதேசங்களுக்கும், ஏனைய பிரதேசங்களுக்கும் தங்களால் முடிந்த அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற முஸ்லீம் அமைச்சர்கள் பிரதேச வாதத்தை முன்னிலைப் படுத்தியே அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றனரா? என்றும் கேட்கத் தோன்றுகின்றது.

சுக்குநூறாக உடைந்துபோன பிரதேசவாதம்

அதேவேளை ஸ்ரீலமுகாவின் அதிகாரத்திலுள்ள மாநகர சபை கல்முனையாகும். கல்முனை மற்றும், சாய்ந்தமருது ஊர்களுக்கிடையிலான அரசியல் குரோத மனப்பாண்;மையை மூடிமறைக்க பிரதேசவாசதத்தை விதைக்க எடுத்த முயற்சிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளதாகவே தெரியவருகின்றது. பொதுவாகவே கல்முனைத் தொகுதியில் காணப்படுகின்ற கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மக்களிடையே தொழில்ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் போட்டித் தன்மை காணப்படுவது வழமையான ஒருவிடயமாகும். இன்று கல்முனையின் வியாபார மத்தியஸ்தானம் சாய்ந்தமருதுக்கும், மருதமுனைக்கும் மாற்றக்காணத் தொடங்கிவிட்டது. அதுபோலவே இன்னும் பல தொழில் சந்தைகளும் கல்முiனையை விட்டு விலகி வருவதையும் காணக்கூடியதாகவே உள்ளது. இதற்குக் காரணம் அரசியல் தலைமைகளின் பிரித்தாளும் தந்திரங்கள்தான் என்று கூறுவோரும் உண்டு.

ஒருகாலத்தில் அமைச்சராக இருந்த ஏ.ஆர். மன்சூர் கல்முனைத் தொகுதியில் கல்முனையை மையப்படுத்தி வியாபார நிலையங்களை ஆரம்பித்து தென்கிழக்கின் வர்த்தகத்தலைநகரமாக்க முனைந்து வெற்றியும் கண்டார். பின்னரான காலப்பகுதியில் முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் அந்தஸ்தந்து பெற்றதும் சகல கிராமங்களும் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதற்கான திட்டங்களைத் தீட்டி பிரித்தாளும் தந்திரங்களை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு ஒரேதேசம் ஒரே பிரதேசம் என்பதை மனதில் வைத்து தென்கிழக்குப் பிரதேசம் முழுவதும் ஒரே பிரதேசம் என்பதை அபிவிருத்தி செய்து, செயலிலும் காண்பித்தார் ஸ்ரீலமுகா. கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப்.

உதாரணமாக ஒலுவிலில் பல்கலைக்கழகம், துறைமுகத்தையும், சம்மாந்துறை மற்றும் பொத்துவில், தீகவாபி, திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கிளைகளை நிறுவியும், நிறுவவும் கனவு கண்டார். பாலமுனையில் மிகப் பெரும் வைத்தியசாலையை அமைத்து அங்கு மருத்துவத்துறையையும் அமைக்கக் கனவுகண்டார். பிரதேசவாதமே இல்லாத ஒரு ஜீவனாக வாழ்ந்து அரசியல் செய்து கட்சியை வளர்த்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது மரணத்தின் பின்னர் தலைவேறு, கால்வேறு, கைவேறு என்று அகப்பட்டோர் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு கட்சித்தாவல்களை தாரகை மந்திரமாக்கி இன்று பிரதேசவாதத்தைக் கக்கிக் கொண்டு அனைவரும் வௌ;வேறு கட்சிகள் எனும் பேரில் ஆளும் அரசுடன் சங்கமாகி அமைச்சராகவும், பிரதியமைச்சராகவும், மாகாண அமைச்சர்களாகவும், மாகாண உறுப்பினர்களாகவும் தன்னை உருவாக்கிக் கொண்டு அரசியல் செய்வதைக் இன்று காணக்கூடியதாக உள்ளது.

கல்முனை மாநகரசபையின் இன்றைய நிலையும் ஸ்ரீலமுகா கட்சியும்

இந்நிலையில், கல்முனை மாநகர மேயர்விடயத்திலும் பிரதேச வாதம் தாண்டவமாடியதையும், அதுபின்னர் பிசுபிசுத்துப் போனதையும் நாம் முன்னரே குறிப்பிட்டிருந்தோம். கடந்தவாரத்தில் கிழக்கு அரசியலில் பேசப்பட்ட கல்முனை மாநகரமேயரின் பதவி இராஜினாமாத் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கல்முனை மேயர் சிறாஸ்மீராசாஹிபு தனது பிரச்சினையை தனக்கு வாக்களித்த மக்களான சாய்ந்தமருதின் மைந்தர்களினது கைகளில் ஒப்புவித்துள்ளதாகத் தெரியவருகின்றது. அமைச்சர் றஊப் ஹக்கீமின் அரசியல் சாணாக்கியத்தின் விளைவினாலும், மேயர் சிறாஸின் போக்கும் எதிர்காலத்தில் முஸ்லீம் காங்கிரஸின் வாக்குவங்கியில் பலத்த அடிவிழுந்துள்ளதாகவே மூத்த அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார். மேயர்;பதவியை சிறுதுகாலத்திற்காவது நீட்டித் தருமாறு அழுத்தமாகக் கூறி,  வேண்டியபோதிலும் மறுத்துரைத்த ஸ்ரீலமுகாவின் தலைவரின் விடாப்பிடி சில மாற்றங்களை கல்முனையின் எதிர்கால அரசியலில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். எனவும் நம்பப்படுகின்றது.

அதேவேளை அக்கரைப்பற்று பொத்துவில் பகுதிகளில் நீதிமன்றக் கட்டிடங்களைத் திறந்துவைப்பதற்காக வருகைதந்திருந்த அமைச்சர் றஊப் ஹக்கீமுடன் பிரதமநீதியரசரும் வந்திருந்தார். அத்துடன் நீதித்துறை சார்ந்த பலரும் வருகை தந்திருந்தனர். அப்போது அம்பாரை மாவட்ட முஸ்லீம் அரசியல் கீழ்மட்ட அபிமானிகள் தொடக்கம் உயர்மட்ட அபிமானிகள் வரை அங்கு வருகைதந்து தலைவரின் முன் ஆஜராகியிருந்தனர்;;;;;;. அண்மைக் காலமாக கிழக்கின் ஸ்ரீலமுகா கட்சியின் உள்வீட்டு அரசியல்வாதிகளுக்கும், உயர்பீடத்திலுள்ள உயர் மட்டத்தினருக்கும் இடையில் சில கசப்பான வார்த்தைகள் இழையோடியிருந்த நிலையில் கல்முனை மேயர் விடயத்தில் தலைவரின் ஒரே நிலையான தீர்மானத்தின் பயனாக எதிர்காலத்தில் முகாவினருக்கு வழங்கப்பட உத்தேசித்துள்ளதாகக் கருதப்படுகின்ற பிரதியமைச்சர் பதவிகளை தட்டிப் பறிப்பதில் குறியாய் இருப்பவர்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை தனது தலைவனின் முன்னே இருந்து காண்பித்தாகவும் கூறப்படுகின்றது.

எது எவ்வாறாக அமைந்திருந்தாலும் பிரதேசவாதம் அரசியல் வாதிகளிடமிருந்து ஒருநாளும் மங்கி மறையாது என்பதற்கு ஒவ்வொரு ஊர்களிலும் வித்தியாசமான முறையில் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் பார்க்கின்றபோது புரிகிறது. இவ்வாறான அபிவிருத்திகள் காரணமாக அபிவிருத்திகளை காணாத அயலிலுள்ள சிறிய கிராமங்களில் வாழுகின்ற மக்களுக்குள் பெறாமையும், விரக்தியுனர்வும் மேலோங்குகின்றன என்பதையும் இந்த அரசியல்வாதிகள் கவனத்திற் கொள்ளவேண்டும். கல்முனை மாநகர சபைத் தேர்தலின்போது இறுக்கமற்ற தன்மையை அரசியல் தலைமை மேற்கொள்ளாததன் விளைவு இப்போது நன்கு புரிகிறது. காகம் நிற்கப் பணம்பழம் விழுந்த கதைபோல, இன்றைய அரசியல் சித்தவிளையாட்டுக்கள் அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தால் அதுவே சிறந்த அபிவிருத்தி என்று கூறலாம். அதனை நிறைவேற்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுவார்களா? அல்லது பிரதேசவாதத்தை ஊட்டி வளர்ப்பார்களா? அடுத்த தேர்தலில் மக்கள் ஒற்றுமையாக வாக்களிக்க முயற்சித்தால் இவர்கள் இருந்த இடம்தெரியாமலேபோய்விடும். நடக்குமா?

No comments

Powered by Blogger.