Header Ads



இஸ்லாமிய பிரதிநிதிகளின் வருகைக்கு, மியன்மார் பௌத்த பிக்குகள் எதிர்ப்பு

(Tn) உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்வதற்கு எதிராக அங்கு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ. ஐ.சி) செயலாளர் நாயகம் இக்மலதின் இஹ்சா னொக்லு தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று மியன்மார் செல்லவுள்ளனர். ஓ. ஐ. சி. நாடுகளைச் சேர்ந்த ஏழு வெளியுறவு அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்குகின்றனர். இந்த பிரதிநிதிகள் குழு மியன்மார் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன்போது பெளத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட மியன்மாரில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து தீர்வொன்றை எட்ட ஓ. ஐ. சி. பிரதிநிதிகள் முயற்சிக்கவுள்ளனர். இதற்காக முஸ்லிம் தலைவர்கள் மியன்மார் பாராளுமன்ற பெளத்த உறுப்பினர்கள் மற்றும் ரொஹிங்கியா சமூக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது மியன்மாரில் மதக்கலவரம் இடம்பெற்ற ரகினா பிராந்தியத்தை பார்வையிடவும் ஒ. ஐ. சி. பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மியன்மாரின் ரங்கூன் நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் “வெளியேறு”, “உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்து” போன்ற பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.

மியன்மாரில் இடம்பெற்ற மதக் கலவரங்களில் 240 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு 240,000 க்கும் அதிகமான வர்கள் வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டனர். இதில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட் டனர்.

No comments

Powered by Blogger.