சீனாவையும் ஹையான் தாக்கியது - பாடசாலை கட்டடத்திற்குள்ளே 1000 மாணவர்கள் சிக்கினர்
பிலிப்பைன்ஸ் நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கியதுடன், கடும் பொருட்சேதங்களை ஏற்படுத்திய ஹையான் புயல், சீனாவை நோக்கி நகர்ந்து பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இன்று காலை மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சான்லிசி நீர்த்தேக்கத்தில் சென்ற படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 10 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களில் 2 பேர் இறந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றினர். மீதமுள்ள 4 பேரைக் காணவில்லை.
தெற்கு சீனாவில் உள்ள குவாங்சி சுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் நேற்று மாலை கனமழை பெய்து கொண்டிருந்தபோது, சைக்கிள் ரிக்சா ஒன்று ஆற்றுக்குள் விழுந்தது. அதில் பயணம் செய்த 6 பேரில் 4 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடக்கிறது. 2 பேர் நீந்தி கரையேறினர்.
சான்லி டவுன்ஷிப்பில் உள்ள நடுநிலைப்பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. 1.5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் அங்குள்ள 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஹையான் புயல் தாக்குதலுக்கு இதுவரை 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment