சரத் பொன்சேக்காவின் இலக்கு..!
(vi) அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பலமானதொரு ஆளும் கட்சியாக உருவாவதே எமது இலக்கு. நாட்டின் மூன்றாம் சக்தியாக உள்ள நாம் வெகு விரைவில் அரசாங்கத்தினை அமைப்போம் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்து விட்டனர். எனினும், அரசியல் சூழ்ச்சியே என்னை சிறைக்கு அனுப்பிவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று நாம் பலமானதொரு கட்சியாக உருவாகியுள்ளோம். கடந்த 6 மாத காலத்தில் நாம் சிறந்த மூன்றாம் சக்திக் கட்சியாக எம்மை இனங்காட்டியுள்ளோம்.
எனினும், எமது அரசியல் பயணம் 2010ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. யுத்த வெற்றியின் பின்னர் மக்கள் மனதில் நானே சிறந்த தலைவனாக விளங்கினேன். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. அப்போதைய நிலைமையில் நியாயமானதொரு தேர்தல் நடந்திருக்குமானால் இன்று எனது தலைமையின் கீழே நாடு செயற்பட்டிருக்கும். மக்களையும் நாட்டையும் சிறந்த முறையில் பாதுகாத்து சிறந்ததொரு மக்கள் ஆட்சியினை நடத்தியிருப்பேன்.
எனினும், அரசியலில் என்னைப் பழிவாங்கி எனது வெற்றியினை முடக்கி சிறைக்கு அனுப்பிவிட்டனர். யார் என்னை அடக்கிவைத்தாலும் நான் அஞ்சப்போவதில்லை. இந்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நான் மீண்டுமொரு முயற்சியினை எடுத்துள்ளேன். இன்று நடக்கும் அராஜக ஆட்சியினை நீக்கி நாட்டினை காப்பாற்ற என்னாலான அனைத்து முயற்சிகளையும் நான் கையாள்வேன்.
மேலும், இம்முறை மாகாண சபைத் தேர்தல்களில் 90 ஆயிரம் மக்கள் என்னை ஆதரித்துள்ளனர். எவ்வித உதவிகளையும் நான் செய்யாது மற்ற அரசியல் கட்சிகளைப் போல் இலஞ்சம் கொடுக்காமல் நான் 90 ஆயிரம் மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளேன். இதை எமது மிகப்பெரிய வெற்றியாகவே கருதுகின்றோம். எனவே, வரும் தேர்தல்களிலும் எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து பலமானதொரு மக்கள் கூட்டத்தினை உருவாக்கி அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுப்போம்.
எமது நோக்கம் பலமான இரண்டாம் சக்தியாவதல்ல. எமது நோக்கமும் இலக்கும் பலமான அரசாங்கத்தினை அமைப்பதாகும். எனவே, எதிர்வரும் காலங்களில் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து பலமான அரசாங்கத்தினை உருவாக்கி இந்த நாட்டை ஜனநாயக ரீதியில் ஆளுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment