Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 'அப்பம்' சண்டை

இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத் தலைவர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பங்காளிக் கட்சிகளின் பரிந்துரைகளை கணக்கில் எடுக்காது தமிழரசுக் கட்சி தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக டெலோ அமைப்பிலிருந்து வடக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள கே. சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே, முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் முன்னால் நடந்த பதவிப் பிரமாண நிகழ்வை தாம் உள்ளிட்ட 9 உறுப்பினர்களும் புறக்கணித்ததாகவும் அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுவதாக டெலோ, ஈபிஆர்எல்எப் குற்றச்சாட்டு

டெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண அமைச்சர்கள் தெரிவினையும் அங்கீகரித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் கட்சி ஏற்கனவே எடுத்திருந்த முடிவுக்கு மாறாக நடந்துகொண்டதையிட்டு டெலோ கட்சியின் பொதுக்குழு உடனடியாகக் கூடி முடிவெடுக்கும் என்று சிவாஜிலிங்கம் தமிழோசையி்டம் கூறினார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈபிஆர்எல்எப் கட்சியினர் மீது திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டுவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமது கட்சியினரின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்கவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

'சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி கோரியதைப் பற்றிக் கூறும் முதலமைச்சர், ஏன் முல்லைத்தீவு மாவட்டத்துக்காக அமைச்சுப் பொறுப்புக் கோரியதைப் பற்றி ஊடகவியலாளர்களிடம் வாய் திறக்கவில்லை' என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் நேர்மையாக நடந்திருந்தால் தங்கள் கட்சியினர் கோரிய முழுமையான விடயங்களையும் ஊடகங்களிடம் கூறியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பங்காளிக் கட்சிகள் பலவும் பதவிப் பிரமாண நிகழ்வைப் புறக்கணித்திருந்த நிலையில், தமது கட்சியை மட்டும் கொச்சைப்படுத்தும் விதத்தில் விக்னேஸ்வரன் கருத்துக்கூறியுள்ளதாகவும் சுரேஷ் கூறினார்.

No comments

Powered by Blogger.