விஹாராதிபதிக்கு ஏற்பட்ட சுகயீனத்தை போக்கும் பூஜை வழிபாட்டில் குழப்பம் - 7 பேர் கைது
(tm) வெலிவேரிய, ரத்துபஸ்வல நெதுன்கமுவ விஹாரையில் நேற்றிரவு நடத்தப்பட்ட இராபூஜையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஏழுபேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்த போது விஹாரைக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்களே விஹாரையில் பூஜை வழிபாடுகளில் இருந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மஞ்சள் நிறத்திலான ஆடையணிந்திருந்து முழந்தாலிட்டிருந்த ஒருவரை வெள்ளை நிறத்திலான துணியினால் மூடிக்கொண்டிருந்தபோதே அங்குவந்தவர்கள் இது என்ன என்று வினவியதுடன். எந்த தெய்வம் என்றும் கேட்டுள்ளனர். அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்தே அவர்கள் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பூஜை வழிபாடுகளின் போது கோழிகள் இரண்டும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிறுவனமொன்றின் ஊழியர்களே குழப்பம் விளைவிக்கவந்ததாகவும் அவர்கள் வந்த இரண்டு வாகனங்களின் டயர்களின் காற்றை விஹாரையில் இருந்தவர்கள் இறக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் ஏழுபேரை தாம் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் விஹாராதிபதிக்கு ஏற்பட்டுள்ள சுகயீனத்தை போக்குவதற்கான பூஜை வழிபாடுகளே அங்கு இடம்பெற்றதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Post a Comment