கிண்ணியாவில் முஸ்லிம் சகோதரரிடமிருந்து ரூ.20 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை
(tm) கிண்ணியா, மாலிந்துறை முதலாம் ஒழுங்கையில் வைத்து இன்று சனிக்கிழமை மாலை 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள சபனான் ஜூவலரி உரிமையாளர் முகம்மது பரீத் என்பவர் தனது கடையைப் பூட்டி விட்டு தங்க நகைகளுடன் துவிச்சக்கர வண்டியில் வீடு சென்று கொண்டிருந்த போதே மாலை 6.00 மணியளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே அந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் முகம்மது பரீத் கருத்துத் தெரிவிக்கையில்,
தான் வழமையாக மாலை 5.45 மணியளவில் கடையைப்பூட்டி விட்டு வழமையாக வருகின்ற பாதையால் வந்து கொண்டிருந்த போது எனது வீட்டுக்கு சுமார் 75 மீட்டர் தொலைவில் வைத்து தலைக் கவசம் அணிந்து வந்த 25, 26 வயது மதிக்கத்தக்க இருவர் எனது பைசிக்களையும் என்னையும் தள்ளி விட்டு பைசிக்கிள் கூடைக்குள் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த கிண்ணியா பொலிஸார சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Post a Comment