மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் விபரம்
அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநித்துவம் செய்யும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் பலர் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் டி.எம் ஜயரத்னவின் மகன் அனுராத ஜயரத்ன, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகேனின் மகன் பிரமித்த பண்டார தென்னகோன், மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார். அத்துடன் அமைச்சரின் மூத்த மகனான திலின பண்டார தென்னகோன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.
அதேவேளை பிரதிமைச்சர் ரோஹன திஸாநாயக்கவின் சகோதரர் பராக்கிரம திஸாநாயக்க, உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்கவின் மகன் சிந்தன ஏக்கநாயக்க ஆகியோரும் மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகாரவின் சகோதரரான ரஞ்சித் அலுவிகார மீண்டும் மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் நுவரரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் எஸ்.பி .திஸாநாயக்கவின் சகோதரர் சாலிய திஸாநாயக்க தோல்வியடைந்த போதும், ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட அவரது மற்றுமொரு சகோதரரான ஜயலத் திஸாநாயக்க வெற்றி பெற்றார்.
கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் மைத்துனரான ஆனந்த வீரசிங்க என்பவரும் மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.
அதேவேளை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன், ஜோஹான் பெர்ணான்டோ மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஜயரத்ன ஹேரத்தின் மகன் பியுமல் ஹேரத், வடமேல் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளதுடன், அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவின் மனைவியான மஞ்சுளா திஸாநாயக்கவும் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.
இவர்களுடன் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீனும் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தவிர அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பாவின் சகோதரரான சந்தன யாப்பா அபேவர்தனவும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றயீட்டியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமனி ஜயவிக்ரம பெரேராவின் மகனான அசங்க பெரேராவும் வடமேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் தயாஸ்ரீத திசேராவின் மகன் சுமல் திசேரா, முன்னாள் அமைச்சர் த.மு. தஸநாயக்கவின் மனைவி இந்திராணி தஸநாயக்க, அவரது மைத்துனரான அமல் மாயதுன்ன ஆகியோரும் வடமேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் உறவினரான கந்தையா சர்வேஸ்வரன் வடமாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.

அப்பாடா... இப்படியே பட்டியல் நீண்டால் எதிர்காலத்தில் 'குடும்ப அரசியல்வாதிகள்' என்றொரு தனி இனம் இந்த நாட்டில் உருவாகிவிடும். சனத்தொகைக் கணக்கெடுப்பிலும் இவர்களை தனி இனமாகக் குறிப்பிட வேண்டிய நிலைமை ஏற்படும்.
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-