அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுக்கு அமைச்சர் றிசாத் அவசர கடிதம்
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த சிலாவத்துறை தபபாலகத்தினை சகல வசதிகளும் கொண்ட நவீன தபாலகமாக தரமுயர்த்துமாறு கோரி வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சரமான றிசாத் பதியுதீன்,தபால் மற்றும் தொலை தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேறிவருவதாகவும், இப்பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 50 வருடம் கொண்ட சிலாவத்துறை தபாலகத்தினை தரமுயர்த்தி சகல வசதிகளையும் ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் பெரும் நன்மையடைவார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தபாலகத்தினை துரிதமாக நவீனமயப்படுத்தி மக்களுக்கான தபால் சேவையினை இலகுபடுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத்,மறிச்சுக்கட்டி தொடக்கம் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் தபால் சேவைகளுக்காக சில சந்தர்ப்பங்களில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருங்கன் தபாலகத்துக்கு செல்ல நேரிடுவதாகவும் தமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment