சிரேஷ்ட ஊடகவியலாளர் காதர் சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது பெற்றார்
(யு .எல் .எம் . றியாஸ்)
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் 2012ஆம் ஆண்டின் சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருதை வென்றெடுத்துள்ளார்.மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் விலேஜ் விசிட் என்ற பகுதியில் எழுதிய கட்டுரைகளுக்காகவே இந்த விருது கிடைத்தது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய 14வது 'சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கல் 2012' நிகழ்வு அண்மையில் கொழும்பு கல்கிசை மௌண் லெவண்யா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட இருதின பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மோகன்லால் பியதாச ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதருக்கான விருதையும் சான்றிதழையும் வழங்கினார்.
பி.எம்.எம்.ஏ.காதர் 1988ஆம் ஆண்டு 'அன்னை' என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஒன்று மித்திரன் வாரமலர் பத்திரிகையில் பிரசுரமானது முதல் இவர் எழுத்துத் துறைக்குள் நுழைந்தார்.
இலங்கையில் வெளியாகுகின்ற அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும்
ஊடகவியலாளராக பணி புரியும் இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதோடு 200க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட இறுதியில் ஊடகப் பணியில் 25 வருடத்தைப் பூர்த்தி செய்யும் இவர்
2010ஆம் ஆண்டிலும் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக சுப்ரமணிய செட்டியார் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பி.எம்.எம்.ஏ காதர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அவரின் ஊடகப் பணி சிறப்பாகத் தொடர்ந்து மேலும் பாராட்டுக்கள் பெற வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன். -ஏ.எல்.ஜுனைதீன்
ReplyDelete