திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு - 2 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர் (படம்)
(ஏ.ஜே.எம்.சாலி)
திருகோணமலை - மாபல்பீச் பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவருமே மேற்படி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களாவர்.
இலங்கை விமானப் படையினரால் நடத்தப்படும் மேற்படி விடுமுறை விடுதியிலேயே இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப்படை கோப்ரல் ஒருவரே குறித்த இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின்கமான்டர் என்.டி .விஜேசூரிய தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் விமானப்படை கோப்ரல் தன்னைத்தானே சுட்டுள்ளார் . இதன்போது படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் தொடர்பு காரணமாகவே இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


Post a Comment