Header Ads



புனித நோன்பு காலத்திலும் குண்டுகளுக்கு ஓய்வில்லை

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டு தாக்குதல்களில் 32 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை நோன்பினை நிறைவு செய்ய மக்கள் கடைவீதிகளை நோக்கிச் சென்ற போது புது பாக்தாத், டாப்ஜி, ஷீர்தா அல்-ராபியா, ஜப்ரானியா, அல்-மதைன் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே கார் குண்டுகள் வெடித்து சிதறின. இந்த தாக்குதல்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பொதுவாக ரம்ஜான் நோன்பு காலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் ஈராக்கில் குறைவாகவே நிகழும்.

இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு தொடங்கியதில் இருந்து நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் 250க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.