எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி அரேபிய பெண் சாதனை
அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார்.
ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் கடுமையான பயிற்சி எடுத்து, இச்சாதனையை செய்துள்ளார் என்று அவரது அப்பா ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார். எவரெஸ்ட்டுடன் உலகின் ஏழு மலைச்சிகரங்களை அடைந்து ராஹா தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.
பன்னாட்டு விளையாட்டு அமைப்பின் நெருக்கடியை அடுத்து, இரு விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சவூதி அரசு கடந்த வருடம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment