தண்ணீர் ஊற்றினால் செல்போன் சார்ஜ் ஆகிவிடும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
இனி செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிது தண்ணீரை ஊற்றினாலே செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் அளிக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துவிட்டது. இன்று மழை வருமா என்பது முதல், காய்கறிகள் விலை என்பது வரையில் செல்போனிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.
இதனால் செல்போனில் எப்போதுமே பேட்டரி முழுமையாக சார்ஜ்ஜில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், மின்சாரம் அடிக்கடி தடைபடும் இடங்கள், காட்டுப்பகுதியில் இருப்பவர்கள், பல மணி நேரம் வெளியில் சுற்றுபவர்கள் என்று பல தரப்பினருக்கு செல்போன் பேட்டரி சார்ஜ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால் கூடுதலாக ஒரு பேட்டரியை இவர்கள் எடுத்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
இதுபோன்ற பிரச்னை இனி இல்லை. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கேடிஎச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பல்கலைக்கழகத்தில் செல்போன் பேட்டரிகளுக்கு சார்ஜ் அளிக்கும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்ஒய்எப்சி பவர் டிரெக் (மைஎப்சி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஆன்டர்ஸ் லண்ட்பிளாட் கூறியதாவது:
மைஎப்சி கருவியில் புதுப்பிக்கதக்க உலோக வட்டத்தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. செல்போன் பேட்டரியில் சார்ஜ் இல்லாதபோது, இந்த கருவியில் சிறிது தண்ணீரை ஊற்றி அதை யூஎஸ்பி வயர் மூலம் செல்போனில் இணைக்க வேண்டும்.
கருவியில் நல்ல தண்ணீர் அல்லது கடல் தண்ணீர் என்று எந்த தண்ணீரையும் ஊற்றலாம். மேலும், அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சாக்கடை நீரையும் ஊற்றலாம். கருவியில் ஊற்றப்படும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்டு, பின்னர் அது வேதிவினை மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு மின்சாரமாக மாற்றப்படுகிறது.
இந்த மின்சாரம் அப்படியே செல்போன் பேட்டரிக்கு செல்லும். இதன் மூலம் ஒரு ஐபோனுக்கு 25 முதல் 100 சதவீதம் வரை சில நிமிடங்களில் சார்ஜ் அளிக்க முடியும். சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெறுவதை காட்டிலும் மிக விரைவாக இதில் இருந்து மின்சாரத்தை பெற முடியும். லேப்டாப்புக்கு திரவ பேட்டரியை கண்டுபிடிக்கும் முதல் முயற்சியாக மைஎப்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment