Header Ads



இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருமா..?


(Tm) இலங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர்.

ஆயினும், இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் மீன்பிடி அமைச்சு நல்ல முடிவை எதிர்பார்த்துள்ளது என்று மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான, கட்டுப்பாடில்லாத வகையில் களவாக மீன்பிடித்தல் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் இலங்கைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததன் பின்னர்  இவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததாக மீன்பிடித்தொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

மீன் பிடிப்பதற்காக சர்வதேச கடலில் களவாக நுழையும் 11 இலங்கை படகுகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச கடலில் மீன் பிடித்தலுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

22 பில்லியன் பெறுமதியான மீன் உற்பத்திகளை ஆண்டுதோறும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிலிருந்து கொள்வனவு செய்துவருகின்றது.

சட்டவிரோதமான, கட்டுப்பாட்டில்லாத களவான மீன்பிடித்தல், மீன் வளத்தை அருகச்செய்கின்றது. கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடத்தை அழிக்கின்றது. போட்டித்தன்மையை திரிபுபடுத்துகின்றது. அத்துடன் குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை பலவீனப்படுத்துகின்றது என்றும் அவர் சொன்னார்.

சட்டவிரோத மீன்பிடியினால் இலாபமடைய காரணமாகவுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக உழைக்கின்றது என்றும் அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.