Header Ads



ஊடகவியலாளர் லசந்தவைக் கொன்றது பொன்சேகா - மஹிந்த 3 முறை கூறினாராம்


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே, சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்ததாக, மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக, புலம்பெயர்ந்துள்ள ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். 

மூன்று முறை மகிந்த ராஜபக்ச இதனை லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர், லால் விக்கிரமதுங்கவிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

லண்டனில் பொருளாதார மற்றும் அரசியல் விஞ்ஞானப் பாடசாலையில், நவநீதம்பிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றியிருந்தார். அவரது உரையை அடுத்து இடம்பெற்ற கருத்தரங்கிலேயே உவிந்து குருகுலசூரிய இதனை பகிரங்கமாக கூறியுள்ளார். 

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சரத் பொன்சேகா சம்பந்தப்பட்டுள்ளதாக மூன்று முறை மகிந்த ராஜபக்ச கூறியதாக, தன்னிடம் தெரிவித்த லால் விக்கிரமதுங்க, சாத்தியப்பட்டால், இதுபற்றி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் உவிந்து குருகுலசூரிய தெரிவித்துள்ளார். 

இந்தக் கருத்தரங்கை அடுத்து இடம்பெற்ற இராப்போசன விருந்தின் போது, லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தக்கோரும் லால் விக்கிரமதுங்கவின் கடிதத்தின் பிரதியை ஊவிந்து குருகுலசூரிய, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்ததாக அறியப்படுவதாக கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.