Header Ads



அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் நிலவரம்..!


(ரீ.கே. றஹ்மத்துல்லா)

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விஷேட ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தை மறைக்காதவகையில் சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளாகி வரும் இக்கட்டிடத் தொகுதியை பள்ளி வாயல் முன்பாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் இது தொடர்பாக ஆராய்வதற்காக முன்னாள் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை புறந் தள்ளிவிட்டு பள்ளிவாசலின் முகப்பை மறைக்கும் வகையில் நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும், குறித் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக இச்சந்தைக் கட்டடத் தொகுதியை நிர்மானிக்க அமைச்சரவை உத்தரவு பிறப்பிக்க வெண்டுமெனவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்தார். 

இதனை ஆராய்நத பின்னரே மேற்படி தீர்மானத்தை மாகாண அமைச்சரவை மேற்கொண்டுள்ளது. இதன் பிரதிகள்  முதலமைச்சரின் செயலாளர் மற்றும் நெல்சிப் திட்டத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் முகப்புத் தோற்றத்தை மறைக்காத வகையில் அங்கு அமைக்கப்படடிருந்த பல்லாண்டு காலம் பழமை வாயந்த கட்டடங்கள் அகற்றப் பட்டு அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் பல கோடி ரூபா நிதயொதுக்கீடு செய்யப்பட்டு இருண்டு மாடிகளைக் கொண்ட பொது நூலகம் மற்றும் கலாசார மண்டப கட்டிடத் தொகுதி ஆகியன நிர்மானிக்கப்பட்டுள்ளன.

இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வை காண்பதற்காக கிழக்கு முதலமைச்சராக இருந்த சிவனேசத்துரை சந்திரகாந்தன், இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென அப்போதைய மகாண அமைச்சரான துரையப்பா நவரட்ணராஜா தலைமையில் விஷேட ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். 

அந்த ஆணைக்குழு பல்வேறு முறைகளில் கள நிலவரங்களை ஆராய்ந்த பின்னர் 10 பரிந்துரைகளுடன் தமது ஆய்வறிக்கையை முதலமைச்சருக்கு சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் வருமாறு: 

01.  அட்டாளைச்சேனையில் சந்தைச் சதுக்கம் என்று கூறப்படும், தற்போது சந்தை நடவடிக்கைகள் இடம்பெறும் இடத்திலேயே நெல்சிப் திட்டத்தின் கீழான பண ஒதுக்கீட்டில் சந்தைக் கட்டிடத்தை அமைத்தல்.

02.'எல்;' வடிவத்தில் கட்டிடத்தை இருமருங்கிலும் அமைக்காமலும் வடக்கு-தெற்காக அமைக்காமலும் குறித்த சந்தைக் கட்டிடத்தை கிழக்கு மேற்காக அமைத்தல். 

03.அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தை மறைக்காமல் கட்டிடக் கலை நிபுணரின் உதவியுடன் சந்தையை கட்டமைத்தல். 

04.கலாசார மண்டபத்திற்கும் வாசிகசாலைக்கும் நடுப்பகுதியில் பள்ளிவாசலுக்கான பாதை அமைவதைத் தவிர்த்துக் கொள்ளல்.

05.   தெற்குப் பக்கமாக உள்ள பாதையைத் திறந்து ஊர்மக்களும் பெரியார்களும் விரும்புவதுபோல் தென்பக்கமாக நிரந்தர பாதையை அமைத்தல். இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபை தவிசாளரும் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் தரப்பினரும் பள்ளிவாசல் சம்மேளனத்தை அணுகி ஊர் நன்மை கருதி உடன்பாட்டுக்கு கொண்டுவரல் வேண்டும். இதனை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் முகம்மட் நஸீர் மிகச் சுலபமாக செய்ய முடியுமென அணைக்குழு நம்புகின்றது. 

06.  தெற்காக உள்ள பாதையைத் திறப்பதில் கலாசார மண்டபத்தின் ஒரு பகுதியை உடைத்து புதிய பாதையை வடிவமைத்துத் தருவதில் மாகாண அமைச்சர் முழுப் பொறுப்பையும் எடுக்க வேண்டுமென ஆணைக்குழு தீர்மானிக்கின்றது. அத்தோடு கலாசார மண்டபத்தின் ஏணிப் படிகள் மற்றும் கழிவறைகள் அகற்றப்பட வேண்டியேற்படுமானால், அதனையும் செய்து முடிப்பதற்கான ஒழுங்குகளை அமைச்சர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென ஆணைக்குழு முன்மொழிகின்றது. 

07. தற்போது வாசிகசாலைiயாக பயன்படுத்துமு; கட்டிடத்தை முழுவதுமாக சந்தைக் கட்டிடத் தொகுதியாக வடிவமைத்தல் வேண்டும். 

08. ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பிரதேசத்தினுள் எவரும் செல்லாத வண்ணமும் அதனை பாதையாக பயன்படுத்தாத வண்ணமும் தடுப்புச்சுவர் வேலி அமைக்கப்படல் வேண்டும்.

09.தற்போதைய வீதியை முற்றாக மூடிக் கட்டிடத்தை அமைத்து வாசிகசாலைக்கும் புதிதாக கட்டப்படும் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கும் நடுவாக எழில்மிக்க நீர்த்தடாகம் ஒன்றை நீள் சதுர வடிவில் அமைத்து சந்தைச் சதுக்கத்தை மேலும் அழகுபடுத்த ஒத்துழைக்க வேண்டும். 

10.  இப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக இணைப்பு – 1 இல் எம்மால் சிபாரிசு செய்யப்படும் தளவமைவுக்கு அமைய சந்தைக் கட்டிடத் தொகுதியும் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களையும் வடிவமைக்கும் பட்சத்தில் இப்பிரச்சினைக்குரிய நிரந்தர தீர்வு பெறப்படும் என்பதுடன், இனிவரும் காலத்திலும் சந்தைச் சதுக்கம் சம்பந்தமாக எந்தவித பிரச்சினையும் எழாது என ஆணைக்குழு சிபாரிசு செய்கின்றது. 

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று புதிய சபையும் அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையிலேயே இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. 

புதிய திட்டத்தின் பிரகாரம் கட்டிடம் அமைக்கப்படுமானால், ஜும்ஆ பள்ளிவாசலின் முகப்பை மறைக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டி தன்னால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவையானது, ஆணைக்குழுவின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அட்டாளைச்சேனை என்பது எனக்கும் பிறந்த மண்தான். மக்கள் தந்துள்ள இந்த அதிகாரத்தை இந்த ஊரின் நலனுக்காகவே நான் பயன்படுத்துகின்றேன். இந்த சந்தை சதுக்கத்தை அழகுற அமைக்க வேண்டுமென அமைச்சர் அதாவுல்லா எண்ணம் கொண்டார். 

இருந்தபோதிலும் சுயலாப சக்திகள் பிரதேச வாதத்தை விதைப்பதிலும், தமக்கான வாக்குகளை நிலைப்படுத்துவதிலும் முரண்பட்ட கருத்துக்களை கூறி குட்டையை குழப்புவதிலேயே குறியாக இருப்பதாக நினைக்கின்றேன். முன்னைய மாகாண சபை கலைக்கப்பட்டு விட்டது என்பதற்காக, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உதாசீனம் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனடிப்படையிலேயே அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தேன். அதனைப் பரிசீலித்த பின் மாகாண அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்ப்பின் பிரகாரம், ஆணைக்குழுவின் பரிந்தரைகள் மீள வலியுறுத்தப்பட்டுள்ளன. எனவே அதன்பிரகாரமே கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டியுள்ளது என்பதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நல்ல விடயங்களை யார் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். 


No comments

Powered by Blogger.