பௌத்த மதகுருமாரின் சண்டித்தனம் - பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்
(Tm)
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொது பால சென அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று திங்கட்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மதமாற்றம் விவகாரத்தையடுத்து கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரியே பொது பால சென அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இவ்விவகாரம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தங்களது மகன் மதமாற்றம் செய்யப்பட்டதாக பெற்றோர் பொது பால சென அமைப்புக்கு தகவல் வழங்கியதையடுத்து மதமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டாரென்ற சந்தேகத்தில் அவ்வமைப்பு ஒருவரைப் பிடித்து தெஹிவளைப் பொலிஸில் அண்மையில் ஒப்படைத்துள்ளது.
இரு தரப்பினருக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, மதமாற்றத்தை மேற்கொண்டதாகக் அந்நபர் தெரிவித்ததையடுத்து பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நபர் கடத்தப்பட்டே விடுவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 7 பேரைக் கைதுசெய்தனர். அந்த 7 பேரையும் விடுவிக்கக் கோரியும் இவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களில் குறித்த நபரின் பெற்றோரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment