''ஐ.நா.சபை'' உலக மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது கட்டாயமாகும்..!
(எஸ்.எல். மன்சூர் - B.Ed)
(2012 ஒக்டோபர் 24ஆந்திகதி ஐ.நா.வின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை ஒட்டி இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.)
உலகில் ஏற்பட்ட புரட்சிகளும், நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளும் மக்களை வாட்டி வதைத்ததன் விளைவு தலைமைத்துவத்தின் அவசியமும், தீர்வை நாடுகின்ற போக்கும் ஏற்படலாயின. இதன் காரணமாக முதலாம் உலகப்போரின் முடிவில் உலகின் சமாதானத்தையும், பொருளாதார சமூக ஸ்திரத்தன்மைகளையும் பேணும் வகையில் சமாதான சங்கத்தின் ஆரம்பம் இன்றைய ஐநா.சபைக்கு வித்திட்டது எனலாம்.
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் தேசங்களின் அணிகள் சுதந்திரமாக
ஒன்றுசேர்ந்து இனிமேல் உலகில் அழிவுகளுக்கு முடிவுகட்டும் நோக்கில் வலிமை சேர்க்கும் ஒருபுதிய அமைப்பாக தோற்றம் பெற்ற மாபெரும் உலகின் தலைமைச் சபையாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெறலாயின. மீண்டும் ஒருபோர் வெடித்தால் மனிதகுலம் தாங்காது என்பதை கருத்திற் கொண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட் அவர்களால் 1939ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பெயர் உச்சரிக்கப்பட்டு 1942.01.01ஆந்திகதி அதிகாரபூர்வமாக முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொண்ட நாடுகளின் சுயமான விருப்புடன் 1945 ஒக்டோபர் 24ஆந்திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உதயமானது.
அன்றைய பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், அமெரிக்க அதிபர் ருஸ்வெல்ட் ஆகியோர் இணைந்து உருவாக்கிய அத்திலாந்திக் சாசனத்தின் அடிப்படையில் 50நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடியவேளை இதற்கான சாசனத்தையும், சர்வதேச நீதிமன்ற சட்டங்களையும் அங்கீகரித்தன் விளைவாக உருவாக்கம் பெற்றிருந்த ஐநாசபையின் புதுவரவானது உலக நாடுகளின் மீதான பார்வையைச் செலுத்தி எங்கெல்லாம் பிரச்சினைகளும், யுத்தமேகங்களும் உருவாகின்றதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தீர்த்து வைக்க முடியும் என்கிற நம்பிக்கையின் பேரில் அன்று ஆரம்பமான ஐநா. சபையில் இவ்வமைப்பை ஆரம்பிக்க உதவியமைக்காக பலம் பொருந்திய 5 நாடுகளின் வீட்டோ எனப்படும் ஏகபோக உரிமையை ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளின் ஊடாக அதிகாரம் மேம்படுத்தப்பட்டு இன்றுடன் 67வருடங்கள் உருண்டோடிவிட்டன.
ஆனால் இழுபறியிலுள்ள பல பிரச்சினைகள் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதன் காரணமாக இன்றைய காலத்திற்கேற்ற நவீனமுடையதாக மாற்றம் பெற வேண்டிய கட்டாயத்திற்குள் ஐக்கிய நாடுகள் சபை மாற்றம் காணவேண்டும் என்கிற யதார்த்தமான போக்குகளும் மேலோங்கியுள்ளன.
இந்நிலையில் உலக சமாதானத்தையும், மக்களின் உரிமைகளையும், தேசங்களுக்கிடையிலான நல்லுறவையும், சமூக ரீதியிலான பொருளாதார ஒத்துழைப்பினையும், நாடுகளின் அபிவிருத்தியினை மேம்படுத்துவதிலும் அது பாரிய பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கதாகும். அந்த வகையில் மேற்கூறப்படுகின்ற பிரதான நோக்குகளின் அடிப்படையில் தனது பலத்தை பிரயோகித்து வந்தாலும், யுத்தங்களுக்கான தீர்வினை பெறல், மனிதகுலத்திற்கு தீங்குவிளைவிக்கும் ஆயுதங்களுக்கு ஆப்புவைத்தல், பொருளாதாரரீதியாக மந்தமாகிப் போன நாடுகளுக்கு உதவுதல், சர்வதேச ரீதியாக மனித உரிமைகளை கண்காணித்தல், குடியேற்ற ஆதிக்கத்தை இல்லாமலாக்குதல் போன்ற பல்வேறு சர்வதேச ரீதியான போக்குகளையும் கைக்கொண்டு அமைதி, பாதுகாப்பைப் பேணுதல் போன்ற கொள்கைகளையும்; மேற்கொண்டுள்ளமையானது இன்னொரு உலக யுத்தம் ஏற்படுவதிலிருந்து
தவிர்த்தே வந்துள்ளமை விசேட அம்சங்களாகும்.
ஐ.நா. அமைப்பானது கடந்தகாலங்களில் உலகில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மேலாதிக்கம் செலுத்தி வாய்ப்பூட்டு போடும் நிகழ்வுகளையும் நடாத்தி பிரச்சினையற்ற உலகை காணவிளைந்திருந்தன. அந்தவகையில் ரொடீசியாவின் சிறுபான்மை வெள்ளையரின் ஆதிக்க வெறிக்கு முடிவுகட்டி சிம்பாபே நாட்டை விடுவித்தமை, தென்னாபிரிக்காவின் இனவெறிக்கெதிரான இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்து நெல்சன் மண்டேலாவை விடுவித்து, அந்நாட்டின் ஜனநாயகத்திற்கு வித்திட்டமை, ஈராக் குவைத்தில் படையெடுத்தபோது குவைத்தை மீட்டமை, யூகோஸ்லேவியா பிரச்சினை, கிழக்கு திமோருக்கு சுதந்திரம், சேர்பியாவின் பிடியிலிருந்து கொசோவாவை அங்கீகரித்தமை, பர்மாவின் அடக்குமுறைக்கு
ஆங்சாங்சுயியை விடுவித்தமை போன்ற பல்வேறு விடயங்களில் ஐநாவின் பங்களிப்பு மேலாதிக்கமாக காணப்பட்டாலும் தென்னாபிரிக்காவும் இந்தியர்களும் கருப்பினத்தவர்களுக்கு எதிராக கைக் கொண்ட இன ஒதுக்கல் கொள்கை, பலஸ்தீனத்தில் அடாத்தான முறையில் நிலைநிறுத்தப்பட்ட இஸ்ரேலை இன்றுவரை எவ்வித தீர்மானமும் இன்றி அல்லப்படும் பலஸ்தீனம் அதனுடன் இணைந்த யூதர் அராபியர்களுக்கிடையிலான மோதல்கள், இந்திய பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை, இந்தியா சீனா பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்கு முடிகட்டாமல் போனமை ஐ.நா. சபையின் மிகப் பெரும் பலவீனமாகவே பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் உலகின் பொதுமன்றமாகத் திகழும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அன்று என் நோக்கை கருதி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கை தொடர்ந்த செல்ல முடியாது திண்டாடுவது கவலைக்குறிய விடயமாகும். குறிப்பாக அமெரிக்காவின் கைபொம்மையாக மாற்றம் பெற்றுள்ளமை ஒருபுறம், சிறிய நாடுகளினதும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தனது மூக்கை நுழைத்து அதிகாரமிக்க ஐநா. சபையின் மேலாதிக்கத்தினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஐநாவின் பாதை திசைமாறி ஆட்டம் கானும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதோ எனவும் கடந்தகால பலநிகழ்வுகள் தொட்டுக்காட்டுகின்றன. 1947ஆம் ஆண்டுக்குப் பின்னர் பலஸ்தீனப்பிரச்சினை இன்றும் வரையும் நிரந்தரத் தீர்வை நோக்கிய நடையில் பல்வேறு சறுக்கல்களை ஏற்படுத்தி நிரந்தமான சமாதான பூமியாக மாற்றம் கொடுக்க முடியாது போனமை மிகப் பெரிய துரதிஷ்டமே என்கிற ஒரு மாயையும் உள்ளது. இதற்கான பொறுப்பு அமெரிக்காவையும், அதன் நேச நாடுகளையுமே சார்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இஸ்ரேல் என்கிற நாட்டிற்காக மத்திய
கிழக்கில் நீருபூத்த நெருப்பாக காணப்படும் பிரச்சினையை தொடர்ந்தும் தக்கவைத்து மத்திய கிழக்கில் தனது நீண்ட காலக் கணவை நிறைவேற்றும் பணியில் அன்று ஈராக்கையும், இன்று ஈரானையும் துவம்சம் செய்து அடி வேரூடன் பிடுங்க எத்தனிக்கும் முயற்சி கவலை தரும் விடயங்களாகும். அதுமட்டுமன்றி அதிகார வெறியை ஒருகாலகட்டத்தில் ஈராக் ஈரான் யுத்தங்களின்போது அமெரிக்கா வழங்கியதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தமை உலகமே அறிந்தவிடயமாகும். அந்த ஆயுதங்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஈராக்கின் அதிபராக இருந்த சதாமை படியிறக்கம் செய்வதற்காக அந்தநாட்டையே யுத்தக்காடாக மாற்றிய பெருமை அமெரிக்காவையும் அதன்
நேச நாடுகளையுமே சாரும். இன்று அந்த நாட்டில் மக்கள் பசி பட்டினிகளாலும், வெடிகுண்டுக் கலாசாராத்திற்கும் பழக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். அன்று சதாம் ஹூசைனுக்கு எதிரான யுத்தம் இறுதியில் வெறும் புஷ்;வானமாகிப் போனதுதான் உண்மையாகும். இத்தனைக்கும் ஐநா.சபை வீட்டோ அதிகாரம் ஒரு காரணியாக அமைந்திருந்தமை முக்கியமாகும்.
இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குறிப்பாக மத்திய கிழக்கில்; பல நாடுகள் யுத்தமுனைகளை சந்தித்து மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்ககையில் ஈடுபடுத்தப்படுகின்ற ஒரு காட்சி உருவாக்கம் பெற்றுள்ள நிலையில் எகிப்து, லிபியா போன்ற நாடுகளின் பட்டியலில் சிரியாவும் சேர்ந்துள்ளமை கவலையான விடயாகும்.
ஆதிக்க வெறியர்களின் அடக்கு முறைக்குள் அகப்பட்டுப்போவதை யாரும் விரும்பமாட்டார்கள். உலகின் தனிப்பெரும் இராசாவாக வலம் வரும் அமெரிக்காவின் முழு ஆதரவுடன் ஐநா பணிகள் நடைபெறுகின்ற ஒரு போக்கும் இவ்வாறான குழப்பங்களுக்கு வித்திடுகின்றன என்கிற வாதங்களும் கூறப்படுகின்ற நிலையில் பலமிக்க ரஷ்யாவினதும், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் போட்டித்தன்மைகள், அணுஉலை விஸ்தரிப்புக்கள், பிராந்திய வல்லரசுகளின் உருவாக்கம் போன்றனவும், கொண்டுவரப்படுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தகளில் ஒப்பமிடாது போகும் நிலை போன்றன ஐநா.சபையினால் எடுத்தாளப்பட முடியாத பலவீனத்தையே காட்டிநிற்கின்றன.
பல நாடுகள் உலக மட்டங்களில் மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்படுகி;ன்ற திட்டங்களையும், சர்வதேசப் பாதுகாப்பினையும் வீட்டோ அதிகாரமிக்க ஏகாதிபத்திகள் தங்கள் வசம் உள்ள துரும்பினை பிரயோகிப்பதன் மூலம் நிறைவேறாத சட்டங்களும், திட்டங்களும் கிடப்பில் போடவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதானது முழுமையான தலைமைத்துவத்தையும், அடிப்படையான நோக்கையும் உலகிற்கு வழங்க முடியாத நிலையில் மந்தமான ஒருபோக்கையே இன்று ஐநா.சபை கொண்டிருக்கின்றது என்றும் கூறலாம்.
இத்தகைய மாபெரும் ஐ.நா. சபைக்கு எதிர்நீச்சல் போட்டு தடுக்கும் சக்தியையோ, நிரந்தரமாக தீர்க்கும் ஒரு முற்போக்கு சிந்தனை மாற்றமோ இன்றி அமெரிக்காவின் ஊதுகுழலாக செயற்படுவதே தனது இலட்சியமாக கொண்டுள்ளதோ என எண்ணத் தோன்றுமளவுக்கு இதன் பணிகள் சில காணப்படுகின்றமை கவலை தரும் விடயமாகும். இதனைத் தவிர்த்து உலகமயமப்படுத்தப்பட்டவாறு வீட்டோ அதிகாரமும் பரவாலாக்கப்பட்டு ஒரு புத்வேகம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினையில் ஐநாசபையின் பார்வைகள் பலமாகப் பட்டதாகினும் கடந்த முப்பது வருடமாக புரையோடிப்போன யுத்தத்தைக் கூட இந்த சின்னஞ்சிறு நாட்டில் உலகின் சமாதானத்திற்கு வித்திட புறப்பட்ட ஐநா. சபையினால் முடியாமல் போனதும் ஒருவகையில் துரதிஷ்டமே எனலாம்.
எனவேதான் உலகின் ஆதிக்கவெறியர்களை முடிவுகட்டி, சமாதான சகவாழ்வுள்ள உலகைக் கட்டியெழுப்பும் மாபெரும் சக்தியான ஐநா.சபை மாற்றம் காணவேண்டும். 67வருடங்கள் பெற்றுக் கொண்ட முயற்சிகள், வீழ்ச்சிகள் போன்ற நிலைமைகளை ஆராய்ந்து மாற்றம் காணவிளைய வேண்டும். அணுஆயுதப் போட்டிகள், வின்வெளியையும் வெற்றி கொள்ளத் துடிக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகள் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா கண்டங்கங்களிலுள்ள பல நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள், பேரினவாதிகளின் ஒடுக்கு முறைகள், மதசுதந்திரத்திற்கு குழிபறிக்கும் காடைத்தனம், வாழும் சுதந்திரத்தை வழங்காது நிலத்தை அபகரிக்கும் அடக்குமுறை அரசுகள், எழுத்துச் சுதந்திரம் போன்ற அனைத்தையும் கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்று நசுக்குகின்ற நாடுகளின் உள்நாட்டு தலையீடுகள் அனைத்தையும் முடிவுகட்டும் ஒரு மாபெரும் தலைமைத்துவத்தை பேணுகின்ற ஒரு சபையாக மீட்சி பெறவேண்டும்.
ஆண்டுதோறும் பல மாநாடுகள், பேச்சுவார்த்தைகள், உத்தியோக விஜயங்கள் என்று அரசதலைவர்கள் ஒன்றுகூடுகின்றனர். முடிவுகள் எட்டப்படுகின்றன. ஆனால் பிரயோகிக்கின்ற போது அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்ற ஒரு நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
ஐநா அமைப்பானது பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூகநலன் சபை, நம்பிக்கை பொறுப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம், தலைமைச் செயலகம் என்கிற ஆறுபிரதான சபைகளையும் முக்கியமான பாத்திரத்தில் காணப்படும் பாதுகாப்புச்சபையில் 15நாடுகள் அங்கம் வகிக்கின்றதுடன், பிரஞ்சு. அரபு, ஆங்கிலம், ஸ்பானி, ரஷ்யன், மாண்டரின் போன்ற ஆட்சி மொழிகளையும் உள்ளடக்கிய இம்மாபெரும் சபையில் கடந்த 2001.07.14ஆந்திகதியில் இணைந்து கொண்ட தென் சூடான் நாட்டுடன் சேர்ந்து 193 நாடுகள் அங்கம் வகிக்கின்ற இம்மகா சபையில் இலங்கையும் இதன் ஆரம்பகால உறுப்பு நாடுகளில் ஒன்றாகும்.
இலங்கையின் முன்னாள் பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவல அவர்களால்
1955.12.14ஆந்திகதி அன்று ஐநாசபையில் இணைந்து கொண்டன் மூலம் இன்றுவரை இலங்கையின் பல்வேறு செயற்றிட்டங்களிலும், நாட்டின் அபிவிருத்திகளிலும் பாரிய பங்களிப்பினை இவ்வமைப்பு நல்கி வருவகின்றது. இதன் கீழ் காணப்படும் பல உலக நிறுவனங்களின் ஒத்துழைப்;பு நமது நாட்டுக்கு பங்களிப்பு செய்கின்றன. இதுவரை அமையப்பெற்ற உலக அமைப்புக்களில் முதனிலை வகிக்கும் இவ்வமைப்பு பல சவால்களுக்கும் முகங்கொடுத்து வல்லரசுகளுக்கிடையிலான அரசியல் முறுகல் நிலைகளையும், இராணுவப் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காணவும் மீண்டும் ஒரு உலக யுத்தம் ஏற்படாதவாறு பாதுகாத்து வருகி;ன்றன என்பதில் ஐநாசபையின் செயற்பாடுகள் சிறந்தவொரு வழிகாட்டியாக அமைகின்ற என்பதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.
இனிவரும் காலங்களில் உலக சமாதானத்தின் விடிவுக்கான தமது பணிகளில்
தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல புதிய யுக்திகளையும், உலக அரசுகளின் மேலாதிக்க போக்கையும், அதிகாரமிக்க சபையாக அமைகி;ன்றதையே அமைதிவழியில் உலகை காணும் மக்களின் பேராவாவாக காணப்படுகின்றது.
பாதுகாப்பு மற்றும் பொதுச்சபைகளினால் எட்டப்படுகின்ற ஒரு தீர்மானத்தை
அமுல்படுத்தாது தன்னாதிக்கமான ஒரு முடிவினை மேற்கொண்டு உலக வல்லரசான நாடுகள் இவ்வமைப்புக்குள் செயல்படுவது தடுக்கப்பட வேண்டும். எனவேதான்; சவால்களை வெற்றி கொள்ளவும், யாருக்கும் அடிபணியாத, உண்மையான சமாதானத்தை விளைவிக்கவும் மாற்றம் காணப்பட வேண்டும். சமாதான பூமியாக நாம் வாழும் புவியானது அமைதி வழியில் வாழும் உலக மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் பணியில் ஐநா மாற்றம் காணவேண்டுமென்பதே சமாதானத்தை விரும்பும் உலக மக்களின் தாகமாகும்.

Post a Comment