Header Ads



மன்னார் ஜம்இய்யத்துல் உலமா சபையின் முக்கிய அறிக்கை..!


“கொடிய யுத்தம் அகன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று இனங்களுக்கிடையில் கசப்புணர்வுகள் நீங்கிச் செல்லும் வேளையில் மீண்டும் ஒரு குழப்பத்தைத் தோற்றுவிக்க திரைமறைவில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடித்து ஒரே தேசத்தின் மக்களாக நாம் அனைவரும் வாழ சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” இவ்வாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மன்னார் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த எமது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டு 23 வருடங்கள் கழிந்த நிலையில், தற்போது மீள்குடியேற வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் பல் தேவைப் பாடுகள் உடையவர்களாக இருந்து வருகின்றனர்.

குறிப்பாக கடற்றொழிலை பிரதான தொழிலாகக் கொண்டவர்களாக மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலும் விடத்தல் தீவிலிருந்து வந்த தமிழ் கத்தோலிக்க மீனவர்களுக்கு எமது முஸ்லிம்களின் மீனவத்துறையினை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தொழில்புரிவதற்கு சந்தர்ப்பம் வழங்கினோம். எமது முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேறும்போது இவர்கள் இவ்விடத்திலிருந்து செல்லவேண்டுமென்று அன்று புலிகளின் மன்னார் பொறுப்பாளராகவிருந்த அமுதன் என்பவரால் உடன்படிக்கையும் செய்யப்பட்டது.

இருந்த போதும், இன்றுவரை இந்த விடத்தில் தீவு கத்தோலிக்க மீனவர்கள், எமது முஸ்லிம் மீனவ சமூகத்துக்குச் சொந்தமான உப்புக்குளம் துறையினைக் கொடுக்காமல் இருக்கின்றனர். அரச அதிகாரிகள் உட்பட தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து இவர்களுக்குக் கூறியும் அது நடை பெறவில்லை.

எமது உரிமைகள் பறிக்கப்படும்போது இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நியாயம்கோரி பல தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தபோதும் அது காத்திரமான பதிலைக் கொடுக்கவில்லை. அதனால் வேதனையடைந்த எமது மக்கள் வீதியில் இறங்கி மிகவும் அமைதியாக எவ்வித வன்முறைகளும் இன்றி தமது கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதன்போது நீதிமன்றத்திலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியேவந்த மன்னார் நீதிபதி அவர்கள், எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர் மக்கள் அல்லோலகல்லோப்பட்ட நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர்.

இது எமது மக்களால் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றல்ல. அப்போது நீதிமன்றக் கட்டடத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இந்த சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தவறு செய்தவர்களுக்குச் சட்டம் தண்டனை வழங்கவேண்டும் என்பதில் நாம் மாற்றுக்கருத்துடன் இல்லை.

அதேபோன்று மன்னாரில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இந்தச் சம்பவத்தின் பின்னணியில் எமது வன்னி மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு எவ்வித பேதமும் இன்றிப் பணியாற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களை சம்பந்தப்படுத்தியுள்ளதை நாம் முற்றாக மறுக்கின்றோம். நடந்ததை சரியாக அறிந்துகொள்ளாமல் பிழையான தகவலின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படுவது எமது வடபுல முஸ்லிம்களுக்குச் செய்யும் இழப்பாகும்.

சட்டத்தை மக்களுக்காகச் செயற்படுத்தும் சபையின் சட்டத்தரணிகள் அமைப்பு எவ்வித இனத்துக்கும், மதத்துக்கும் சொந்தமானது அல்ல என்பதால் நீங்கள் நியாயத்தினையும், உண்மையின் தவல்களின் அடிப்படையில் செயற்படுவதனாலும் ஒரு தரப்பின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து எமது முஸ்லிம்களுக்கும், எமது மக்களது விமோசனத்துக்கும் அயராது பாடுபடும் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக எடுக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதுடன் உண்மையினைக் கண்டறிய உங்களது உயர் சபையின் பிரதிநிதிகள் மன்னாருக்கு விஜயம் செய்து எமது மக்களுடன் கலந்துரையாடவேண்டும் என்பதையும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

4 comments:

  1. பத்து வயது சிறுமியை பத்து நாட்களாக கூட்டுக் கற்பழிப்பு செய்து துண்டம் துண்டமாக வெட்டி கடலில் போடுபவனுக்காக சுளையாக பணத்தை வாங்கிக் கொண்டு, குற்றவாளியை சுத்தவாளி என்று வாதாடுபவர்கள்தான் சட்டத்தரணிகள். இவர்கள் அணியும் கறுப்பு ஆடை போல இவர்களின் உள்ளமும் கருமையானது. இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. பிரபாகரன் கைது செய்யப் பட்டிருந்தால், பிரபாகரனுக்காக வாதாட போட்டி போட்டிருப்பாகர்கள் கறுப்புச் சட்டைக் காரர்கள்.

    ReplyDelete
  2. மன்னாரில் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவது சில சாதியினருக்கு விருப்பமில்லை. முன்பு மன்னாரில் வாழ்ந்த நல்ல சாதியினர் தட்போது அங்கு இல்லை. அரசாங்க அதிகாரிகளோ துவேசத்தின் உச்சத்தில் உள்ளனர். புலிகள் அழிந்தாலும் அவர்கள் விதைத்து விட்டுச் சென்ற நச்சுக் கருத்துக்கள் அதிகாரிகள் மனதில் ஆழமாக வேர் விட்டுள்ளது. அது ஒருபக்கம்.
    அமைதி போராட்டம் நடத்திய முஸ்லிம்கல் மீது சுடுமாறு உத்தரவு பிறப்பிக்க இலங்கை சட்டத்தில் இடமுள்ளதா என்பதை அறியாத நீதிபதி அங்கு நடந்து கொண்ட முறை சட்டத்துக்கும் இலங்கை அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. எனவே முதலில் நீதிபதி செய்தது சட்டப் படி செல்லுமா என்று பார்த்து முரண்பட்டிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இதட்கு நீதியமைச்சர் ஹக்கீம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்பவனை விட குற்றம் செய்ய தூண்டுபவனே பெரும் குற்றவாளி. அமைதி பேரணியில் சுடுமாறு கத்தி குழப்பத்தை உண்டாக்கியது யார். பொலிசார் கண்ணீர் புகை அடித்த பின்னர் நீதி மன்றம் தாக்கப் பட்டதா ? அவ்வாறானால் யார் பொறுப்பு. உண்மையில் நீதிமன்றம் தாக்கப் பட்டதா? அவ்வாறு யாரவது நீதி மன்றத்தை தாக்கியிருந்தால் அவர்களின் சார்பில் மன்னர் உலமா சபை உடனடியாக மன்னிப்பு கேட்டு ஜனாதிபதிக்கும் நீதி அமைச்சருக்கும் கடிதம் எழுத வேண்டும். அதேவேளை சுடுமாறு கத்தியவர் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். அதட்காக நீதி அமைச்சரை உடனடியாக உலமா சபை சந்திக்க வேண்டும்.
    இலங்கையன் இர்பான்

    ReplyDelete
  3. மன்னர் பிரச்சினை தொடர்பான அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் வழிகாட்டல் அல்லது உத்தியோக பூர்வ அறிக்கை வெளியிடப்படல் வேண்டும். இதில் இருக்ககூடிய சுயநல அல்லது பிரதேசவாத அரசியல், முழு இலங்கை முஸ்லிம் களையும் ப்ரச்சினைக்குள்ளக்கி விடக்கூடாது!

    ReplyDelete
  4. ஒரு நீதிபதி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு உத்தரவிடுவது எந்த சட்டத்தின் அடிப்படையில்?

    ReplyDelete

Powered by Blogger.