சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் - அச்சப்படுகிறது இஸ்ரேல்
சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரேல் நாட்டு ராணுவத் துணைத் தளபதி யாயிர் நவே தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு மக்களுக்கே சிரிய அரசு கொடுமை செய்து வருகிறது. இந்நிலையில், வாய்ப்புக் கிடைத்தால் ரசாயன ஆயுதங்கள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெருசலேத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் உரையாற்றிய நவே இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது,
உலகில் சிரியாவிடமே அதிக அளவிலான ரசாயன ஆயுதங்கள் கையிருப்பு உள்ளன. ஆனால் தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்கள் குறித்து எந்தத் தகவலையும் அந்நாடு கூறவில்லை. எனவே அதனிடம் உள்ள ஆயுதங்களின் அளவு குறித்து எதுவும் தெரியாது.
சிரியாவில் இப்போது அரசுக்கும் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், சிரிய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும்போது இதுபோன்ற ஆயுதங்கள் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது என்றார் அவர்.

Post a Comment