பாகிஸ்தானில் அடுத்து என்ன நடக்கப்போகிறது..?
"கோர்ட் அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் பதவி கடந்த ஏப்ரல் மாதமே தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எனவே, புதிய பிரதமரை, அதிபர் சர்தாரி நியமிக்க வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கு:பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இவரது மனைவி பெனசிர் புட்டோ பிரதமராக இருந்த காலத்தில், ஏராளமான ஊழல் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. முஷாரப் அதிபராக இருந்தபோது, அவசரச் சட்டத்தின் மூலம், இந்த ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்த அவசரச் சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்படாததால், சர்தாரி மீதான வழக்கை, மீண்டும் விசாரிக்கும் படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு உத்தரவிட்டது.
கோர்ட் அவமதிப்பு:"நாட்டின் உயர் பதவியை வகிக்கும் சர்தாரி மீது, ஊழல் தொடர்பான விசாரணை நடத்த முடியாது' என, பிரதமர் கிலானி, சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி தெரிவித்திருந்தார்."சட்டத்தின் முன் அனைவரும் சமம்' எனக் கூறிய சுப்ரீம் கோர்ட், சர்தாரி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கும் படியும் சுவிஸ் அரசுக்கு கடிதம் அனுப்பும் படியும் கிலானிக்கு உத்தரவிட்டது.பிரதமர் கிலானி, சர்தாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தாத பிரதமர் கிலானி, "குற்றவாளியே' என, சுப்ரீம் கோர்ட், கடந்த ஏப்ரல் 26ம் தேதி, தீர்ப்பு கூறியது. எனினும், அவருக்கு சிறைத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.
கண்டனம்:சுப்ரீம் கோர்ட், "குற்றவாளி' என உத்தரவிட்ட பிறகும், கிலானி பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு, எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.குற்றம் ஏதும் செய்யாத கிலானியை பிரதமர் பதவியிலிருந்தோ எம்.பி., பதவியிலிருந்தோ நீக்க முடியாது, என பாகிஸ்தான் பார்லிமென்ட் சபாநாயகர் பெமிதா மிர்சா திட்டவட்டமாக தெரிவித்தார். சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்தும், கிலானியை பதவி நீக்கம் செய்யக்கோரி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேரிக் ஈ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் உள்ளிட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை. எனவே, கிலானிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும், என அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் ஆஜராகி வாதாடினார்.
அதிரடி தீர்ப்பு:அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி இப்திகார் சவுத்ரி குறிப்பிடுகையில், ""கோர்ட் அவமதிப்பு வழக்கில், கிலானி குற்றவாளி என, ஏப்ரல் மாதம் 26ம் தேதி, தீர்ப்பு கூறப்பட்டது. அன்றைய தினமே அவரது எம்.பி., பதவியும், பிரதமர் பதவியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், 18 கோடி பாகிஸ்தான் மக்களின் பிரதிநிதியாக எப்படி இருக்க முடியும். எனவே, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீசை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஜனநாயக நடைமுறை தொடருவதை நிரூபிக்கும் வகையில் அதிபர் சர்தாரி, கிலானியை பதவி நீக்கம் செய்து விட்டு, புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்,'' என்றார்.சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பால், பாகிஸ்தானில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment