Header Ads



''நெஞ்சறைக்குள் ஓர் அற்புதம்'' - டாக்டர் ரயீஸின் டயரியிலிருந்து..!

ஆறு வருடங்களுக்கு முன்னால் மருத்துவக் கல்லூரியின் கடைசி வருட மாணவனாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். அன்றிரவு 7 மணி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு. 34 வயது நிரம்பிய அந்த மனிதனின் உடைந்து போன இதயம் சற்றுக் கூடுதலான வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

ஆம் அடுத்த நாள் காலை அவனது இதயத்தில் "பைபாஸ்' சத்திரசிகிச்சைக்கான ஏற்பாடுகள் 34 ஆம் இலக்க வாட்டில் நடைபெற இருக்கிறது. அந்த மனிதனின் அதிகரித்த இதயத் துடிப்புக்கு அதுதான் காரணம்.

இரவு 10 மணிக்குப் பின்னர் எதுவும் உண்ணவோ குடிக்கவோ கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. சத்திரசிகிச்சைக்காக அவரை முழுமையாக மயக்க நிலைக்கு உட்படுத்த வேண்டியிருந்ததாலேயே அந்த உத்தரவு. இல்லையெனில் மயக்கிய பின் இரைப்பையில் இருக்கும் உணவு மேலெழுந்து நுரையீரலுக்குள் சென்று நியூமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும். எனவே இரைப்பையை வெறுமையாக வைத்திருக்க வேண்டியது சத்திரசிகிச்சை செய்யுமுன் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் ஆயத்தங்களில் முக்கியமான ஓர் அம்சம்.

அந்த நோயாளியின் இரவு அரைகுறைத் தூக்கத்திலும் பசியிலும் கழிந்து கொண்டிருந்தது. அந்த மனிதன் அதிகமாகப் பேசவும் விரும்பவில்லை. எதையோ இழந்தவன் போல் யோசித்துக்கொண்டிருந்தான். தான் பயப்பட வில்லை என்று எங்களிடம் சொல்லிக் கொண்டாலும் அவனின் நாடித்துடிப்பு வேகம் அவனது உண்மையைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

காலை 7 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக சத்திரசிகிச்சைக்குரிய வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். நாங்கள் ஒபரேஷன் தியேட்டரில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். சாதாரண சத்திரசிகிச்சை போலல்லாமல் ஏற்பாடுகள் தடல்புடலாக இருந்தது. ஒபரேஷன் செய்யும் மாணவனாக பக்கத்தில் ஏற்பாடுகள் ஓர் உபகரணம் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவ மாணவனாக முதன் முதலில் அதனை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த உபகரணம் ஒரு காரியாலய மேசையின் அளவு பெரியதாக இருந்தது.

அதுதான் (Heart Lung Machine) எனப்படும் "செயற்கை இதயம்!'  அந்த உபகரணத்தை இயக்க பயிற்சி பெற்ற இருவர்!!! அவ்வளவு பெரிய உபகரணம் ஆயிரமாயிரம் ஏற்பாடுகளுடன் சில மணிநேரங்கள் செய்யும் வேலையை எமது நெஞ்சறைக்குள் உள்ள இதயம் எவ்வளவு அற்புதமாகச் செய்கிறது!

அந்த உபகரணம் எவ்வளவு பெரியதாக இருந்தும் கூட இதயத்தின் தன்னியக்க அசைவுகளை அதனால் செய்ய முடியாதிருந்தது. ஆனால், மனிதனின் வாழ்நாள் முழுவதும் தன்னியக்க முறை மூலம் ஒரு நாளைக்கு 7,200 லீற்றர் இரத்தத்தை பாய்ச்சுகின்ற அந்த அற்புத உறுப்பு இதயம் இருக்கும் இடமோ நெஞ்சறைக்குள் ஒரு கைப்பிடியளவு பிரதேசம் தான்!

அந்த உபகரணத்தோடு இன்னுமொரு பகுதி பொருத்தப்பட்டது. அதில் மோட்டார் வாகனங்களில் உள்ள ரேடியேற்றர் போன்ற அமைப்புள்ள ஒரு பகுதி பொருத்தப்பட்டிருந்தது. நுரையீரலுக்குப் பதிலாகப் பொருத்தப்படும் செயற்கை நுரையீரல்தான் (Artifical Lung) அது! அந்த "நுரையீரல்' ஒன்றின் பெறுமதி 20,000 ரூபா என்று சொன்னார்கள். அவ்வளவு பெறுமதியான அந்த நுரையீரலை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதாம். மீண்டும் புதிய ஒன்று மாற்றிக்கொள்ள வேண்டுமாம்.

இவ்வாறு ஒருநாளைக்கு எமது நுரையீரல் செய்யும் வேலையை ஓர் இயந்திரம் செய்வதற்கு 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தேவைப்படும் என்பதை உணர்ந்து கொண்டபோது கடவுளின் அற்புதமான படைப்பிற்கு முன்னால் எவ்வாறு நாம் நன்றிகெட்டவர்களாக வாழ்கிறோம் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இப்படிப் பல ஏற்பாடுகளுக்கு மத்தியில் அந்த நோயாளி கொண்டு வரப்படுகிறார். மருத்துவ மாணவர்களோடு சேர்ந்து 10 பேர் கொண்ட வைத்தியர் குழு சத்திரசிகிச்சையை ஆரம்பித்தது. 3 பேர் கொண்ட குழு அந்த நோயாளியை மயக்கி ஒட்சிசன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 3 பேர் வலதுகாலில் இருந்து பைபாஸ் செய்வதற்கான நாடியை உரித்தெடுத்துக் கொண்டிருந்தனர். மற்றைய நான்கு பேரும் நெஞ்சறையைப் பிளந்து இதயத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

விலா எலும்புகள் பிளக்கப்பட்டு நெஞ்சறை விரிக்கப்பட்டது. நெஞ்சுக்குள் இருக்கும் உறுப்புகளின் காவல் அரண்கள் திறக்கப்பட்டன. உள்ளே இதயத்திற்கென்று தனியாக இன்னுமோர் உறை (Pericardium) அந்த உறையும் திறக்கப்படுகிறது. அதற்குள் அற்புதமான அந்த இதயம் எந்த சலனமும் இல்லாமல் துடித்துக்கொண்டிருந்தது. எனது கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அவ்வளவு அற்புதம் அந்தப் படைப்பு! உலகில் இருக்கும் ஒவ்வொரு நாத்திகனையும் காதைப் பிடித்து ஒபரேஷன் தியேட்டருக்குள் இழுத்து வந்து இந்த அற்புதத்தை நேரடியாகக் காட்ட வேண்டும் என்று ஓர் உணர்வு எனக்குள் பீறிட்டு வந்தது.

துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் ஒபரேஷன் செய்ய முடியாது. இதயத்தின் செயற்பாடுகள் நிறுத்தப் பட வேண்டும். அதற்காக ஓர் ஊசி மருந்து இதயத் தசைக்குள் ஏற்றப்பட்டது. உடனடியாக இதயம் செய்யும் வேலை Heart Lung Machine என்ற அந்த உபகரணங்கள் மாற்றப்பட்டது.

இதயம் இளைப்பாறிக் கொண்டிருந்தது. இதயத்தின் நாடியில் கொலஸ்ட் ரோல் படிவுகளால் ஏற்பட்ட இரத்த ஓட்டத்தை அடையாளமிடப்பட்டது.

காலிலிருந்து உரித்தெடுத்த நாடியை இதயத்தின் தடைப்பட்ட நாடியின் இருபுறத்திலும் இணைந்து இரத்த ஓட்டத்தடை பைபாஸ் செய்யப்பட்டது.

ஆம், நோயுற்றிருந்த இரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்த அந்த இதயத்தின் சத்திரசிகிச்சை 6 மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது. முடிவில் மீண்டும் இயத்திற்கு ஒரு ஊசி மருந்து சற்று இளைப்பாறிய அந்த இதயம் மீண்டும் கம்பீரமாய்த் துடிக்க ஆரம்பித்தது. Heart Lung Machineஇல் இருந்து இரத்த ஓட்டம் மீண்டும் இதயத்தினுள் கொண்டுவரப்பட்டது. உடைக்கப்பட்ட இதயத்தின் உறை மீண்டும் பொருத்தப்பட்டு காவல் அரண், நெஞ்சறை எலும்புகள் மீண்டும் பொருத்தப்பட்டதும் அந்த மனிதனின் நினைவு மீண்டும் பெறப்பட்டது.

எவ்வளவு அற்புதம்! காயங்களைச் சுமந்து கொண்டு அந்த இதயம் மீண்டும் கம்பீரமாய் துடித்துக் கொண்டிருந்தது.

1 comment:

  1. subuhanallah.............
    allah miha thuyavan....

    ReplyDelete

Powered by Blogger.