Header Ads



வடமாகாணத்தின் அபிவிருத்தியை சிலர் குழப்ப முயலுகின்றனர் - அமைச்சர் றிசாத் பதியுதீன்

அமைச்சரின் ஊடகப் பிரிவு

அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனை திட்டங்களை நடை முறைப்படுத்துகின்ற விடயத்தில் சில அரச அதிகாரிகள் செய்யும் கயிறு இழுப்பால் தேவை கொண்ட எமது மக்கள்  பெரும் பாதிப்புக்குள்ளாகுவது அதிகரித்துவருவதாக  வடமாகா அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கிளிநொச்சியில் தெரிவித்தார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று சனிக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கேடபோர் கூடத்தில் இடம் பெற்றது. இவ்வருடம் நடை முறைப்படுத்தப்படும்  அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன்,கடந்த வருடத்தின் அபிவிருத்தியின் குறைபாடுகள் பற்றியும் ஆராயப்பட்டது.இங்கு மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைக்கும் போது,

சகல அபிவிருத்தி திட்டங்களும் மக்களுக்கானது என்பதை அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும். மக்கள் பிரதி நிதிகளின் ஆலோசனையுடன் தான் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஏனெனில் மக்களுடன் இரண்டறக்கலந்து நிற்பவர்கள் அவர்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சில அதிகாரிகள் அவர்களது விருப்பங்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை நடை  முறைபடுத்திவிட்டு கொடுப்பனவுக்காக அனுமதியினை பெற எம்மிடம் ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர். அது நியாயமானதல்ல. இம்மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சகல செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய கடமையும்,தேவையும் எமக்குள்ளது.

அழிந்து போன எமது மாவட்டங்களை அபிவிருத்தி செய்கின்ற பணியில் நாம் ஈடுபடுகின்ற போது சில குழப்பவாதிகள் அதனை குழப்ப முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு தேவை இந்த அரசாங்கம்  மக்களுக்கு எதையும் செய்வதில்லை என்பதை காட்டுவதே. அந்த செயலுக்கு சில அதிகாரிகள் துணை போகின்றனர்.

இந்த நாட்டில் முழுமையான ஜனநாயகம் இருக்கின்றது. தனிப்பட்ட செயற்பாடுகளை எவரும் செய்யலாம்.அது அவர்களது தனிப்பட்ட வாழ்ககையோடு தொடர்புபட்டதாக இருக்க வேண்டும்.அரசாங்க  ஊழியர்களாக இருந்து கொண்டு அதற்கு எதிரான செயற்பாடுகளை செய்வது அனுமதிக்க முடியாது.அரசாங்கத்தின் வேலைத்த திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்றால்,அந்த இடத்தில் இருந்து கொண்டு தொடரந்து தடையாக இருக்காமல்,அதனை செய்யக் கூடிய ஒருவருக்கு இடம் கொடுப்பது தான் சமூகத்திற்கு செய்யும் பெரும் கைங்கரியமாகும்.

பிரதேச அபிவிருத்தி குழுவின் முதல் அதிகாரம் பெறப்பட்டு பின்னர் அவை மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு சமர்பித்து அதனது அனுமதியினையும் பெற்றதன் பின்னர் தான் அபிவிருத்தி திட்டங்களை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற விடயததில் உரிய அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் கூறினார்.

வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் தற்போது காணப்படும் கல்வி நிலை வீழ்ச்சி குறித்தும் இங்கு அதி கூடிய கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.