''என்னை விடுதலை செய்யுங்கள்'' - நோர்வேயில் 77 பேரை கொன்றவன் சொல்கிறான்
நோர்வேயில் சென்ற வருடம் ஜூலையில் துப்பாக்கிச் சூட்டிலும் குண்டுவெடிப்பிலுமாக 77 பேரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்துர்ஸ் பெஹ்ரிங் ப்ரெய்விக், ஓஸ்லோவில் நடந்துவருகின்ற வழக்கு விசாரணையில் தனது செயல்களைப் பற்றி பெருமை பேசும் விதமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் ஐரோப்பாவில் மிக மிக அட்டகாசமாகவும் அதிநவீனமாகவும் தாக்குதல் ஒன்றை நடத்தியது நான் தான் என்று ப்ரெய்விக் தெரிவித்துள்ளார். தொடர்புடைய விடயங்கள்வன்முறை "என்னை விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் என்னால் நடத்திக்காட்ட முடியும்" என்று அவர் கூறினார்.
குட்டித் தீவொன்றில் குழுமியிருந்த இளைஞர்களிடையே கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலையும் குண்டுவெடிப்பையும் தானே நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டாலும், பயங்கரவாதச் செயலொன்றில் ஈடுபட்டதாகவும், பெருமளவானோரை ஈவிரக்கமின்றி திட்டமிட்டுக் கொன்று குவித்ததாகவும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவர் ஏற்க மறுத்தார்.
"அந்த துப்பாக்கிசூடு, குண்டுவெடிப்பு எல்லாம் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செயல்கள். அவை தீங்கான செயல்கள் அல்ல" என்று அவர் கூறினார். குடியேற்றக்காரர்களின் வருகையிலிருந்தும், பன்முக கலாச்சாரம் என்ற போக்கிலிருந்தும் நோர்வேயைப் பாதுகாப்பதற்காகத்தான் தான் இதையெல்லாம் செய்தேன் என்று கூறி ப்ரெய்விக் தனது வாக்குமூலத்தை நிறைவுசெய்தார்.
பின்னர் பிரெய்விக்கை அரசு தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்திருந்தார். அல்கைதா கையாண்ட உத்திகளில் இருந்து தான் ஊக்கம் பெற்றதாகக் குறிப்புணர்த்தும் வகையில் அவர் அப்போது பேசியிருந்தார்.
பிரெய்விக் வழங்கக்கூடிய வாக்குமூலம் நோர்வேயில் பலருக்கும் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கும் என்று பிரெய்விக் சார்பாக வாதிடுவதறாக நியமிக்கப்பட்ட சட்டத்தரணிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். ஆனாலும் தன் தரப்பு வாதத்தை முன்வைக்க பிரெய்விக்குக்கு உரிமை வழங்க வேண்டும் என்பதுதான் நோர்வே சட்டம் என அவர்கள் கூறுகின்றனர்.
ப்ரெய்விக் புத்தி சுவாதீனம் இல்லாமல்தான் இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டாரா அல்லது புத்தி சுவாதீனத்துடன் தான் இந்த காரியங்களைச் செய்தாரா என்று நீதிமன்றம் தீர்மானிக்க அவரது வாக்குமூலம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் உளவியல் நிபுணர்கள் அவரை உன்னிப்பாக அவதானித்துவருகின்றனர். பிரெய்விக்கின் வாக்குமூலமோ பிற சாட்சிகளின் வாக்குமூலமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. 10 வாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கில், பிரெய்விக்கின் வாக்குமூலம், விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் மொத்தத்தில் 5 நாட்களுக்கு நடக்கும் எனத் தெரிகிறது.

Post a Comment