எகிப்தில் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் புத்தகங்கள் தீயில் கருகியது
எகிப்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் கலவரத்தினால் உயிர்ச்சேதங்களுக்கு பின்னர், பழைமை வாய்ந்த வரலாற்று பொருட்களும் 92 ஆயிரம் அரிய புத்தகங்களும் தீக்கிரையாகியுள்ளன.
எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் விரட்டி அடிக்கப்பட்ட பின் இராணுவம் ஆட்சி பொறுப்பேற்றது. எனினும், ஜனநாயக முறையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2வது கட்ட தேர்தல் நடந்தது. எனினும், ஆட்சி பொறுப்பில் இருந்த இராணுவம் விலக வேண்டும் என்று கூறி, மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இராணுவத்துக்கும் மக்களுக்கும் நடந்து வரும் பயங்கர மோதலில், கெய்ரோ ஆராய்ச்சி மையத்தில் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அரிய ஆவணங்கள், இதழ்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் தீயில் கருகி உள்ளன. சுமார் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் புத்தகங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் படையெடுப்பின் போது, கெய்ரோவில் நெப்போலியன் நிறுவிய இந்த ஆராய்ச்சி மையத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வரலாற்று ஆவணங்களும் ஏராளமாக இருந்தன. அவையும் தீயில் நாசமாகி உள்ளன. தீயில் கருகியது போக மிஞ்சியுள்ள ஆவணங்களை சேகரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். தாஹ்ரிர் சதுக்கத்தில் உள்ள இந்த அருங்காட்சியக கட்டிடம் நொறுங்கி தரைமட்டமாகும் நிலையில் உள்ளது என்று தெரிகிறது.

Post a Comment