யாழ்ப்பாண கோட்டையில் துரித அபிவிருத்தி
யாழ்.நகரத்தில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டையும் நட்சத்திர வடிவில் அதன் மூலை முடுக்குகளில் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொத்தளங்களும் இடிந்து அலங்கோலப்பட்டுப் போயுள்ளன. நீண்டகாலமாக சிறைச்சாலையாகவும், இராணுவ முகாமாகவும் விளங்கிய இந்த வரலாற்றுக் கட்டடம் ஏகாதிபத்தியத்தின் சின்னமாகவும் கருதப்பட்டிருந்தது.
உள்ளக கட்டுமானங்கள் பெருமளவில் அழிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ பத்தடி அகலமான உயர்ந்த கோட்டைச் சுவர்களும் பாரிய அளவில் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தன. இந்தக் கட்டடமே தற்பொழுது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதன் நுழைவாயிலுக்கான அடித்தள அமைப்பு வளைந்து வந்து அந்தப் பகுதியில் உள்ள அந்தோனியர் ஆலயத்தைத் தொட்டு நிற்கிறது.
பழைய பொலிஸ் நிலையப் பகுதியிலேயே வாசல் இருக்கிறது. சுவர்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. சில இடங்களில் மேற்தளக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தின் மேற்தளங்களிலும் தெற்குப் பகுதியிலும் காணப்பட்ட பற்றைகள், புற்கள் என்பன அகற்றப்பட்டு அப்பகுதி தெளிவாகக் காட்சியளிக்கிறது.
ஒல்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் செப்பனிடப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வரும் கட்டடம் தென் இலங்கை உல்லாசப் பயணிகளின் பார்வைக்குரிய ஒரு மையமாக மாற்றமடைந்துள்ளது. பயணிகள் தமது வாகனங்களை நிறுத்த விஷேட தரிப்பிடம் கோட்டைக்கு கிழக்காகவும் துரையப்பா மைதானத்திற்கு மேற்காகவும் அமைக்கப்பட்டிருப்பதுடன் உணவகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் பாதுகாப்புத்தரப்பினர் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை கோட்டையைப் பார்வையிடலாம்
Post a Comment