Header Ads



சாணக்கியன் போன்ற 6 இளைஞர்களை நாங்கள் களமிறக்கியிருந்தால் நாட்டையே தலைகீழாக மாற்றி இருப்போம் - சுமந்திரன் Mp


13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

(11) மாலை 3 மணியளவில் சுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் "தமிழர்தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் படித்த ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை என்று நாங்கள் தீர்மானித்தோம். ஆனால் அது வேட்புமனுவில் காணப்படவில்லை. 2022ஆம் ஆண்டு தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கலாம் . சாணக்கியன் போன்ற ஐந்தாறு இளைஞர்களை நாங்கள் களமிறக்கியிருந்தால் நாட்டையே தலைகீழாக மாற்றி இருப்போம் 

மாறுகின்ற உலகத்திலேயே நாங்கள் நிறைய மாற்றங்களை உள்வாங்க வேண்டும். சமஸ்டி என்ற சொல் அன்றும் இருந்தது இன்றும் இருக்கின்றது. ஆனால் சமஸ்டிக்கான விளக்கம் தற்போது மாறிவிட்டது. 

சம்பந்தன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பொழுது பிரித்தானியாவில் அன்றிருந்ததைப் போன்று இலங்கையிலும் யாப்பை அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் இன்று உங்கள் நாடு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால் எமது நாடோ பின்னோக்கி சென்றுவிட்டது என்றார். 

சம்பந்தன் அன்றைய சிந்தனையோடு இருக்கவில்லை. புதியதையும் உள்வாங்குகிறார். அதனாலேயே இன்றும் அவர் எமக்கு தலைவராக இருக்கின்றார். 

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது, 13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அப்போதைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வைத் தருவோம் என்கிறார்.ஆனால் சில தமிழ் கட்சித் தலைவர்களோ 13 ஆம் திருத்தத்தை அமல்படுத்த கோருகின்றனர். 

13ஆம் திருத்தம் அடிப்படையிலேயே பழுதுபட்டது அதனை திருத்த முடியாது என இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறுகின்றார். 

13ஆம் திருத்தத்தின் சில முக்கியமான நல்ல விடயங்கள் உள்ளன. அவற்றையும் சேர்த்துக் கொண்டு அதையும் தாண்டிய அதிகாரப்பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்றார். 

-. பிரதீபன்-

No comments

Powered by Blogger.