Header Ads



எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம், பொய் சத்தியக்கடதாசியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டமா அதிபருக்கு 3 வருட சிறை விதிக்கப்படுமா..?


மனச்சாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை வழங்குவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

எமது இந்த செயற்பாடு தவறென அரச தலைவர் கருதினால் எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gamanpila)தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில்அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளமை சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. நாட்டுக்கும்,பொது மக்களுக்கும் சாதகமான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியது அமைச்சரவையின் பொறுப்பாகும்.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு சாதகமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் சத்தியகடதாசி சமர்ப்பித்துள்ளமை அமைச்சரவை கூட்டுப்பொறுப்பிற்கு முரண் என்பதை நன்கு அறிவோம்.

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும்,அரசாங்கத்தின் கொள்கையினையும் பாதுகாத்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. அமைச்சரவை தீர்மானத்திற்கு முரணாக செயற்படுகையில் அமைச்சு பதவி பறிபோகும் என்பதை நன்கு அறிந்தே யுகதனவி விவகாரத்தில் நாட்டுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

நான் உள்ளிட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார ஆகியோர் யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பித்த சத்தியகடதாசியின் உள்ளடக்கம் பொய் எனில் அரசாங்கம் சார்பில் சட்டமாதிபர் உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பித்த சத்தியகடதாசியின் உள்ளடக்கம் உண்மை,எமது சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம் உண்மையாயின் சட்டமாதிபர் சமர்ப்பித்த விடயம் பொய்யாகும்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இரு தரப்பிலும் ஒரு தரப்பினர் சமர்ப்பித்த சத்தியகடதாசியின் உள்ளடக்கம் பொய். நீதிமன்றிற்கு பொய்யான விடயங்களை சமர்ப்பிப்பது 3 வருட கால தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே இவ்விடயத்தில் யாரை சிறைக்கு அனுப்ப வேணடும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.