இரவு 9 மணிவரையில் பணிகளை நிறைவு செய்தே வீட்டுக்குச் செல்கின்றேன், சில பணியாளர்கள் மாலை 4 மணிக்கே வீட்டுக்குச் செல்கின்றனர்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் கண்டி - கொக்கனகல, மல்கமன்சந்தி, பூஜாப்பிட்டி, மேல்கித்துல்கல ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் துமிந்த சில்வாவின் தலைமையில் நேற்று (25) கையளிக்கப்பட்டது
இந்நிலையில், ஹரிஸ்பத்துவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட துமிந்த சில்வா இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
குறைந்த வருமானம் கொண்ட சாதாரண பொதுமக்களுக்குச் சேவையாற்றும் நிறுவனமே வீடமைப்பு அதிகார சபையாகும்.
அதில் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
குறிப்பாகக் கொழும்பு மாவட்ட மக்களுக்காகப் பணியாற்றும்போது மக்களின் துயரம் எத்தகையது என்பதனை நான் அறிந்திருக்கிறேன்.
இதன் காரணமாகவே எனக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் 70,000 வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்காக சிறந்த சேவையாற்றுபவர்களையே பொதுமக்கள் விரும்புவார்கள்.
நான் அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பேனா? இல்லையா? என்பது தெரியாது.
எனினும் சிறந்த சேவைகளை வழங்கியதன் காரணமாகவே எனக்கு இவ்வாறான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
நான் வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்புகளை ஏற்றதன் பின்னர் இரவு 9 மணிவரையில் பணிகளை நிறைவு செய்தே வீட்டுக்குச் செல்கின்றேன்.
எனினும், சில பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து மாலை 4 மணிக்கே வீட்டுக்குச் செல்கின்றனர்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
அத்துடன், சேதன பசளையினூடாக விவசாயத்துறையினை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்காகும்.
அதனைத் திசைத் திருப்புவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.
ஜே.வி.பி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆகியோர் இணைந்தே அதனை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறியளவிலான எண்ணிக்கையிலானோரே இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment