Header Ads



லைபீரியாவில் குற்றங்கள் புரிந்த கிளர்ச்சிப்படை, தளபதிக்கு சுவிட்சர்லாந்தில் சிறைத்தண்டனை


முன்னாள் லைபீரிய கிளர்ச்சிப்படை தளபதிக்கு சுவிட்சர்லாந்தில் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் லைபீரிய கிளர்ச்சிப்படை தளபதியான 46 வயது Alieu Kosiah என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் 2014 முதலே சிறையில் இருப்பதால், எஞ்சிய காலம் மட்டும் அவர் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

தற்போது 46 வயதாகும் Alieu Kosiah லைபீரியாவில் Ulimo என்ற கிளர்ச்சிப்படையில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். Ulimo என்ற கிளர்ச்சிப்படைக்கும் முன்னாள் லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் என்பவரின் NPFL என்ற முன்னணிக்கும் இடையே நீண்ட கால சண்டை நடந்து வந்தது.

இந்த உள்நாட்டு போரினால் சுமார் 250,000 மக்கள் கொல்லப்பட்டதுடன், மில்லியன் கணக்கிலான மக்கள் இடம் பெயர்ந்தனர். இதில் போர் குற்றங்களுக்காக 2012ல் டெய்லர் 50 ஆண்டுகளுக்கு தண்டிக்கப்பட்டார்.

லைபீரியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதற்கு இடையே 1998ல் சுவிட்சர்லாந்துக்கு வந்த Alieu Kosiah புகலிடம் கோரியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சுவிஸ் பெண்மணியை திருமணம் செய்து கொண்டதால், 16 ஆண்டுகளாக எவ்வித பிரச்சனையும் இன்றி லொசேன் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், Civitas Maxima என்ற அமைப்பு தாமாகவே முன்வந்து Alieu Kosiah மீது குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து விசாரணையின் ஒருபகுதியாக கைது செய்யப்பட்ட Alieu Kosiah, கடந்த 2014 முதல் விசாரணை கைதியாக சிறையில் உள்ளார்.

Alieu Kosiah மீது கூட்டு துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை, சிறார்களை ராணுவத்திற்கு பணியாற்ற அனுப்பியது, கிராம மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்டது தொடங்கி, கிராம மக்களை அச்சுறுத்த இதயத்தை பச்சையாக தின்று சித்திரவதைக்கு உட்படுத்தியது உட்பட பலவேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதில் போதிய ஆதாரங்களை Civitas Maxima என்ற அமைப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அது நிரூபணமான நிலையில், தற்போது பெடரல் குற்றவியல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் 15 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற்றவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் வழக்கு ஒன்று சுவிட்சர்லாந்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது இதுவே முதல் முறையாகும். 

No comments

Powered by Blogger.