Header Ads



தேசியப் பட்டியலில் 50 சதவீதத்தை, பெண்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை


நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் கருத்துக்களைக் கோர எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12 இயக்கத்துடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், குறித்த தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இணையவழி ஊடாக இடம்பெற்ற இந்த கலந்தரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய 40 பேர் பங்கேற்றனர்.

தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, எதிர்வரும் 6 மாதங்களில், சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கருத்துக்களையும், யோசனைகளையும் பெறவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 முதல் 70 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் உறுதிப்படுத்துவதற்கான யோசனை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தால், தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கடிதம் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அனைத்து அரசியல் கட்சிகளாலும் தேசிய பட்டியலில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.