வேட்பாளர்களின் புகைப்படம், சின்னம், இலக்கங்கள் வாகனங்களில் காட்சிப்படுத்தினால் சட்ட நடவடிக்கை
(செ.தேன்மொழி)
பொதுதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படம் , சின்னம் மற்றும் இலக்கங்கள் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கும் வாகனங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோத தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் வாகனங்களுக்கு எதிராக தேர்தல் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன , இவ்வாறான சட்ட விரோத பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் போது அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுப்பதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை ஏதாவது வாகனமொன்றில் வேட்பாளரின் புகைப்படத்தையோ, சின்னத்தையோ அல்லது இலக்கத்தையோ அச்சிட்டிருந்தால் அதற்கு எதிராக தேர்தல் சட்டத்திட்டத்திற்கு அமைவாக மாத்திரமின்றி மோட்டார் வாகன சட்டத்தின் கீழும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment