Header Ads



உடனடி தீர்வை, பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி

தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன்வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 250 ஆக மட்டுப்படுத்துவது கடினம் என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். இது பற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி, இருவேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையுடன் அனுமதி வழங்கியுள்ளார்.

கொரோனா தோற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேலும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் பரீட்சைக்கான திகதிகளை தீர்மானிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும் போது வினாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாணவர்களுக்கு தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான இயலுமையை பரிசீலிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய கல்விச் சேவை வரி 24% வீதமாகும். அதனை திருத்தி அமைப்பது தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி இணங்கியதுடன், தனியார் வகுப்பு பிரச்சாரத்திற்கான துண்டு பிரசுரங்களை சுகாதார விதிமுறைகளுக்கேற்ப விநியோகிப்பதற்கும்
அனுமதி வழங்கியுள்ளார்.

ஞாயிறு, பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாமென பௌத்த ஆலோசனை சபை முன்வைத்த வேண்டுகோளை ஜனாதிபதி இக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியதுடன், பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதை முழுமையாக தவிர்ப்பதற்கு ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

க.பொ.த உயர் தரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஞாயிறு காலை வகுப்புக்களை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை சார் அதிகாரிகள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.