அவர்கள் என்ன செய்தாலும் அதனை குழப்பி விடுவேன் என மைத்திரிபால கூறினார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த 69 இலட்சம் மக்களின் ஆணைக்கு அமைய புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுமாயின், அதனை உருவாக்க வேண்டியது ஜனாதிபதி அன்றி நாடாளுமன்றம் அல்ல என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்து தேசிய சக்திகள் உருவாக்கிய மக்கள் ஆணையை பாதுகாப்பது இம்முறை நாடாளுமன்றத்திற்கு செல்ல தயாராகும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பும் கடமையுமாகும்.
நாடாளுமன்றத்திற்கு செல்ல தயாராக இருக்கும் நபர்கள் வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்துவதற்கான உரிமையில்லை. கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட 69 லட்சம் மக்களின் ஆணையை செயற்படுத்த வேண்டும்.
நாடு துர்ப்பாக்கிய நிலைமைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் மக்கள் இந்த ஆணையை வழங்கினர். ஒரு புறம் பிரிவினைவாத அரசியலமைப்பு முன்நோக்கி கொண்டு வரப்பட்டது.
அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தேசிய அமைப்புகளை சேர்ந்த நாங்களே முன்னெடுத்தோம்.
பிரிவினைவாத அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி கையில் வைத்து கொண்டு நாடாளுமன்றத்தில் விளையாட்டை ஆடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
வெளியில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்த பௌத்த பிக்குகள் உட்பட நாங்களே அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தோம்.
அது மாத்திரமல்ல இலங்கை இராணுவத்தினர் போர் குற்றம் செய்தனர் என்று அவர்களை மனித உரிமை மீறல் பொறியில் சிக்க வைக்க முயற்சித்த அதற்கான அலுவலகத்தை திறந்து, பணிகளை ஆரம்பிக்க இருந்த தருணத்தில், நான் முன் அனுமதியும் பெறாமல் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அதிகாலையில் சென்றிருந்தேன்.
இதனை செய்ய வேண்டாம் எனக் கூறினேன். இதன் பின்னர் எமது தேசிய அமைப்புகளின் பிக்குமாருடன் சென்று இதனை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டேன்.
அவர்கள் என்ன செய்தாலும் அதனை நான் குழப்பி விடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். ஒரு மனிதனுக்கு அகௌரவம் கிடைக்க காரணங்கள் இருப்பது போல் கௌரவம் கிடைக்கவும் காரணங்கள் இருக்கின்றன.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படாமல் இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும்.
ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்று கொண்ட ஒப்பந்தத்தை மைத்திரிபால சிறிசேன காரணமாக அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.
இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யாதார்த்தம் எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment