சஜித் தலைமையிலான கூட்டணியை, இல்லாதொழிக்க கட்சிக்குள் சூழ்ச்சி
(இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை இல்லாதொழிக்கவே கட்சிக்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை கட்சி தலைமையகத்தில் கூடியது.
இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் எவ்வாறு புதிய கூட்டணி செயற்பட வேண்டும். என்றும் செயற்குழுவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள் குறித்தும் அடுத்த தீர்மானங்களை எடுப்பதும் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.
இந்த செயற்குழு கூட்டம் நிறைவுப் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டணியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிராக பலமான அரசாங்கம் தோற்றுவிக்கப்பட வேண்டுமாயின் பலமான கூட்டணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பலமான கூட்டணியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. செயற்குழு கூட்டத்தில் இன்று இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் அவற்றை நன்கு புலப்படுத்தின சின்னம் குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் தொட்ர்ந்து இழு பறி நிலையிலேயே காணப்படுகின்றன.
கூட்டணியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதில் தொடர்ந்து பின்வாங்குவதன் அர்த்தம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு சிலரது தனிப்பட்ட அரசியல் தேவைகளினாலே இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இது ஒட்டுமொத்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் கூறினார்.
Post a Comment