"கோத்தபாய வெற்றிப்பெற்றாலும், ரணில் பிரதமராக தொடர்ந்தும் நீடிப்பார்"
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றிப்பெற்றாலும், ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக தொடர்ந்தும் நீடிப்பார் என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இப்போது எந்த தலைமைத்துவப் பிரச்சினையும் எழவில்லை.
கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் தலைவர் பதவியில் இருப்பார்.
இது தொடர்பாக எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவகாரத்தை ஐ.தே.க எவ்வாறு சுமூகமான முறையில் தீர்த்ததோ அதே வழியில் தீர்ப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றாலும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே நீடிப்பார்.
ஏனென்றால், 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கொண்டவரே, பிரதமராக இருக்க முடியும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தற்போதைய நாடாளுமன்றத்தை, நான்கரை ஆண்டுகள் பூர்த்தி செய்யும் வரை கலைக்க முடியாது. இந்த நாடாளுமன்றம், 2020 பெப்ரவரி 17ஆம் திகதியே, நான்கரை ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment