சஜித் வென்றாலும், மாற்றம் நிகழாது - ரணிலை பிரதமராக்கமாட்டேன் என பகிரங்கமாக்க வேண்டும்
சஜித் பிரேமதாச வெற்றிபெற்றாலும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருக்கப்போகின்றார். அதனால் இந்த அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இடம்பெறப்போவதில்லை. அவ்வாறு இல்லை என்றால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கமாட்டேன் என சஜித் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர் வெற்றிபெற்றால் மாற்றங்கள் ஏற்படும் என மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் போல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்திலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய வங்கி பிணைமுறி மோசடி இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபராக பிரதமரே இருக்கின்றார். இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டிருக்கின்றார்.
அமைச்சர் சஜித் பிரேதமாச தேர்தலில் வெற்றிபெற்றால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்றனர். என்றாலும் சஜித் வந்தாலும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருக்கப்போகின்றார்.
அதனால் சஜித் வந்தாலும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அனைத்து ஊழல் மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறும். எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்றார்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment