"முஸ்லிம் வாக்குகளே ஜனாதிபதி, வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளன"
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில், அவர் பெற்றுக்கொள்ளும் வாக்குகள், பிரதான கட்சிகளை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்குமென தெரிவித்த, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளினாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிப்பெற்றார் என்றும் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் TM க்கு நேற்று (03) கருத்து வெளியிட்ட எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா, தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“முஸ்லிம் சமூகத்தில் ஒரு வேட்பாளர் தெரிவுசெய்யப்படவேண்டும். அவர் இலங்கையில் சகல முஸ்லிம் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கவேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர்தான் போட்டியிடுவார்.
எனவே, முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியவர் யார் என்றும், நாட்டை நல்லிணக்கத்துடன் கொண்டு செல்லக்கூடியவர் யார் என்ற விடயங்களை அறிந்து, நாட்டு மக்கள் விரும்பும் வேட்பாளரை அடையாளங்கண்டு , அவரிடம் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த தேர்தலில் முஸ்லிம்கள் களமிறங்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் சார்பாக போட்டியிடும் அந்த முஸ்லிம் வேட்பாளர், ஒப்பந்தம் செய்து கொண்ட பெரும்பான்மையின வேட்பாளரின் இலக்கத்துக்கு முதலாவது வாக்கையும் இரண்டாவது வாக்கை தனக்கும் அளிக்குமாறு பிரசாரத்தில் ஈடுபடவேண்டும்” என்றார்.
அவ்வாறு நடைபெற்றால், உதாரணமாக முஸ்லிம் வேட்பாளர் மூன்று அல்லது நான்கு இலட்சம் வாக்குகள் பெற்றிருந்தால் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம் வேட்பாளரின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுமென்றும் முன்னாள் ஆளுனர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.
-றம்ஸி குத்தூஸ்-
Post a Comment